நடப்பு ஆண்டானது ஐடி துறையினருக்கு போறாத காலமே. ஏனெனில் விடாமல் ஐடி துறையினரை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பணி நீக்கம் என்பதும் இருந்து வருகிறது.
ஒரு புறம் சில நிறுவனங்களில் பணியமர்த்தல் இருந்து வந்தாலும், மறுபுறம் பல நிறுவனங்களில் பணி நீக்கமும் இருந்து வருகிறது.
அதிலும் சில நிறுவனங்கள் செயல்திறன் அடிப்படையில் தற்போது பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளன.
பிரச்சனைகள் குறைவா என்ன?
பொதுவாக மேம்போக்காக பார்க்கும் போது ஐடி துறையில் பிரச்சனைகள் குறைவு என்று தான் கூறத்தோன்றும். ஏனெனில் அவர்கள் தான் வீட்டில் இருந்தே பணி புரிந்து வருகின்றனரே. ஆனால் அது உண்மையல்ல, வீட்டில் இருந்து பணி புரிந்தாலும் சரி, அலுவலகத்தில் இருந்து பணி புரிந்தாலும் சரி, போதிய திட்டங்கள், வேலைகள் இருந்தால் தானே பணி புரிய முடியும். ஆனால் அது சாத்தியமில்லாதது.
பொருளாதாரத்தில் முடக்கம்
உண்மையில் இன்று கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து போயுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரமும் முடங்கி போயுள்ளது எனலாம். இந்த நிலையில் ஐடி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளவர்களின் நிலையும் அது தானே. அப்படி இருக்கையில் அவர்கள் மட்டும் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியும். முடிந்து போன ஒப்பந்தங்களை புதுபிக்க முடியும்.
புதிய புராஜக்ட் திட்டங்கள் கிடைக்குமா?
இப்படி பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் உள்ள ஐடி நிறுவனங்கள் போதிய வருவாய் இல்லாத நிலையில் தான் பணி நீக்கம் என்னும் அஸ்திரத்தினை கையில் எடுக்கின்றன. தற்போது என்னவோ கையில் இருக்கும் புராஜக்ட் திட்டங்களை வைத்து காலத்தினை ஓட்டிக் கொண்டு இருந்தாலும், இனியும் தடையில்லாமல் புதிய திட்டங்கள் இருக்குமா என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது.
பணி நீக்கம் இருக்கலாம்
ஆக இப்படியாக அச்சம் இத்துறையில் பரவலாக காணப்படுகிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக கொரோனா வைரஸ் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் உலக அளவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணி நீக்கம் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஐடி துறையில் மாற்றம்
அதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டோமேஷன் மற்றும் அது தொடர்புடைய டெக்னாலஜிகளுக்கு மாறி வரும் ஐடி நிறுவனங்கள், அதன் ஊழியர்களின் எண்ணிக்கையினை குறைக்க தொடங்கியுள்ளன. இந்த குறைப்பினை கொரோனா வைரஸ் இன்னும் ஊக்கப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பணி நீக்கம் அதிகரிக்கலாம்
இதனை எதிரொலிக்கும் விதமாகத் தான் ஏற்கனவே ஐபிஎம், காக்ணிசன்ட், அசெஞ்சர் உள்ளிட்ட உலகளாவிய நிறுவனங்கள், தங்களது ஊழியர்கள் தொகுப்பில் கணிசமான அளவினை குறைத்துள்ளன. இதே இந்திய நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரியளவிலான பணி நீக்கத்தினை அறிவிக்கவில்லை. இது நல்ல விஷயம் தான் என்றாலும், செயல்பாட்டின் அடிப்படையில், இனி பணி நீக்கம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.