தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் அடுத்து வரும் 2021ம் நிதியாண்டில் சுமார் 39,000 புதிய பட்டதாரிகளை பணியமர்த்தப் போவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து டிசிஎஸ்ஸின் உலகளாவிய மனித வளத் தலைவர் மிலிந்த் லக்காட் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் பணியமர்த்தியதை விட, இது 30% அதிகம் என்றும் கூறியுள்ளார்.
மொத்த ஊழியர்கள்
கடந்த ஐந்து காலாண்டுகளில் நிகர அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையில் டிசிஎஸ் உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் காலாண்டின் இறுதியில் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 4,46,675 ஆக இருந்துள்ளது.
புதியவர்களால் தாக்கம்
இதுபோன்ற புதிய பணியாளர்களை பணியமர்த்துவதன் தாக்கம் குறித்து கூறிய லக்காட், இது தற்போதுள்ள பணியாளர் கட்டமைப்பில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளார். மேலும் புதியவர்களின் பொருத்தமான திறனுக்கு ஏற்ப, பொருத்தமான திறன் தொகுப்பை வழங்குவது நிறுவனத்தின் கடமையாகிறது என்றும் லக்காட் கூறியுள்ளார்.
நிகரலாபம்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த டிசம்பர் காலாண்டில் நிகரலாபம் 0.20% அதிகரித்து, 8,118 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 8,105 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. ஆக மந்த நிலையிலும் கூட நன்கு செயல்பட்டுள்ள இந்த நிறுவனம் வரும் ஆண்டுகளில் இன்னும் திறம்பட செயல்படலாம் என்றும் கருதப்படுகிறது.
இடைக்கால டிவிடென்ட்
இதே போல இந்த நிறுவனத்தின் வருவாய் 6.7% அதிகரித்து 39,854 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 37,338 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் மூன்றாவது இடைக்கால ஈவுத் தொகையாக பங்கு ஒன்றுக்கு 5 ரூபாய் வழங்க நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது. டிசம்பர் காலாண்டில் கண்டிருந்த லாபத்தை விட குறைந்த லாபம் கண்டிருந்த நிலையில் கூட, டிசிஎஸ் இவ்வளவு பணியாளர்களை பணியமர்த்திய நிலையில், இனி வரும் காலாண்டுகளில் இன்னும் அதிகப்பேரை பணியமர்த்துதாக கூறியிருப்பது ஐடி மாணவர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் தான்.