கொரோனா தொற்றுக்குப் பின்பு உலகம் முழுவதிலும் இருந்து இந்திய ஐடி நிறுவனங்களுக்கு டிஜிட்டல் அல்லது டெக்னாலஜி டிரான்ஸ்பார்மேஷன் திட்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளது. இதனால் இப்பிரிவு தொழில்நுட்ப நிபுணர்களுக்கும், அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கான டிமாண்ட் அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐடி வேவைவாய்ப்புத் துறை தரவுகள் கூறுகிறது.
குறிப்பாக BFSI பிரிவு சார்ந்த தொழில்நுட்பத்திற்கு அதிகளவிலான டிமாணட் உருவாகியுள்ளது.
முக்கிய வேலைவாய்ப்புகள்
இந்தியாவில் கடந்த 3 மாதத்தில் Full Stack டெவலப்பர், ரியாக்ட் ஜேஎஸ் டெவலப்பர், ஆண்டுராய்டு டெவலப்பர், ஆன்குலார் ஜேஎஸ் டெவலப்பர், கிளவுட் இன்பரா டெக் டெவலப்பர் ஆகிய பணிகள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என் Quess வெளியிட்டுள்ள வேலைவாய்ப்புத் தரவுகளில் தெரிவித்துள்ளது.
பிற தொழில்நுட்பங்கள்
இதோடு கேமிங் பிரிவில் யுனிட்டி டெவலப்பர், டெவாப்ஸ் பிரிவில் பேம்பூ மற்றும் ஜிரா, மேலும் சேல்ஸ்போர்ஸ் மற்றும் SAP HANA ஆகிய தொழில்நுட்பத்தில் இருக்கும் வல்லுனர்களுக்கும் அதிகளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது.
பெரு நகரங்கள்
இதேபோல் இந்தியாவின் பெரு நகரங்களில் ஐடி வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன் படி பெங்களூர், ஹைதராபாத், புனே, சென்னை, மும்பை, என்சிஆர் மற்றும் பிற முக்கியமான நகரங்கள் அடுத்தடுத்த இடத்தைப் படித்துள்ளது.
பெங்களூர் ஆதிக்கம்
இதனால் மேல குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் அனுபவம் உள்ளவர்களுக்கான வேலைவாய்ப்பு அளவீட்டில் பெங்களூரில் மட்டும் மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் 40 சதவீதம் உள்ளது. இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 18 சதவீதம், புனே-வில் 18 சதவீதம் என ஆதிக்கம் செலுத்துகிறது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக்குப் பின்பு உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான டிஜிட்டல் அல்லது தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் ஒருபக்கம் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும், இதேபோல் அனைத்து விதமாகச் சேவைகளையும் நொடிப்பொழுதிலும், மேம்படுத்தப்பட்ட முறையிலும் அளிக்க முடியும்.
ஆட்டோமேஷன் அதிகரிப்பு
இவை அனைத்திற்கும் தாண்டி உற்பத்தித் துறை, சேவைத் துறை என அனைத்து துறையிலும் டிஜிட்டல் அல்லது தொழில்நுட்ப பரிமாற்றம் அதாவது ஆட்டோமேஷன் செய்வது மூலம் தவறுகள், பிரச்சனைகளைக் குறைக்க முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை அளிக்க முடியும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இதற்கு ஏற்றார் போல் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் போட்டி தன்மையை அதிகரிக்க வேண்டும் என்று வங்கி துறையில் இருந்து அனைத்து முக்கிய வர்த்தகத் துறையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, விதிமுறைகளை மாற்றங்களை அறிவித்தார். இதன் மூலம் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் தேவை நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
வர்த்தகப் போட்டி
அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றத்திற்கு இணையாக உலக நாடுகளில் இருக்கும் பிற நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இணையாக வர்த்தகத்தை மேம்படுத்தத் திட்டமிட்ட காரணத்தால் டெக் சேவைத் துறையில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகம் உருவாகியுள்ளது.
இந்தியாவிற்கு லாபம்..
பொதுவாகவே வெளிநாட்டு நிறுவனங்கள் மலிவான அதேநேரத்தில் தரமான தொழில்நுட்ப சேவைகளுக்கு அதிகளவில் இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களையே நம்பியிருக்கும் காரணத்தால், டெக் சேவைத் துறையில் ஏற்பட்டு உள்ள புரட்சி இந்திய நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. இதனால் அடுத்த 5 வருடத்திற்கு இந்திய ஐடி நிறுவனங்கள் ராஜ வாழ்க்கை வாழப்போகிறது.