உலகம் முழுவதுமே ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எப்போது வேலை பறிபோகும் என்கிற பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் வெளித் தோற்றத்தில் ஐடி ஊழியர்கள் என்றாலே கார், விலை உயர்ந்த பைக், சொந்த வீடு, பப், டிஸ்கோ என வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் உண்மை ஐடி ஊழியர்களின் நிலை, சாதாரண ஊழியர்களை விட மோசம் தான் காரணம் இந்த வேலையில் இருக்கும் நிலையற்ற தன்மை. வழக்கமாக ஐடி நிறுவனங்கள் 500 பேர் ஆயிரம் பேர் தொடங்கி அதிகபட்சம் 2000 பேர் வரை வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்புவது ஐடி துறையில் சாதாரண விஷயம் தான்.
ஆனால் இப்போது ஒவ்வொரு நிறுவனமுமே 2000 பேரை வேலையிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள். அப்படி தன்னுடைய ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் நிறுவனங்கள் யார் யார் தெரியுமா... இன்போசிஸ், கேப்ஜெமினி, காக்னிசன்ட். முதலில் கேப் ஜெமினியில் இருந்து தொடங்குவோம்.
கேப்ஜெமினி
பிரான்ஸ் நாட்டை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம். இந்த பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். இந்த இரண்டு லட்சம் பணியாளர்களில், ஒரு லட்சம் பணியாளர்கள் இந்தியாவில் மட்டும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இப்போது வேலையில் இருந்து வெளியேற்றப்பட இருப்பவர்களில் பலரும் இந்தியர்களாக இருக்கலாம்.
500 பேருக்கு வேலை காலி
இந்த ஒரு லட்சம் பேரில் 500 பேரை தனியாக வடிகட்டி வீட்டிற்கு அனுப்பத் தயார் ஆகிக் கொண்டு இருக்கிறது கேப்ஜெமினி நிறுவனம். அதற்கு கேப்ஜெமினி சொல்லும் காரணம் என்ன தெரியுமா..? உற்பத்தி திறனை அதிகரிக்க இருக்கிறதாம். ஆக ஊழியர்களை பயமுறுத்தி வேலை வாங்குவது போலத் தான் தெரிகிறது. இவர்கள் பதில்.
கேப்ஜெமினி தரப்பு
எங்கள் நிறுவனத்தைப் பொறுத்த வரை இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் தான் நிறுவனத்தின் இதயம். நாங்கள் தொடர்ந்து எங்களுடைய ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை கொடுத்து வருகிறோம். இந்தப் பயிற்சிகள் எங்களுடைய வியாபார கூட்டாளிகளின் தேவைகளுக்கு தகுந்தது போல் கொடுத்து வருகிறோம் என்பதைம் குறிப்பிடுகிறது கேப்ஜெமினி நிறுவனம்.
எத்தனை பேர்
இப்படி வேலையில் இருந்து பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் இதே நிறுவனம், புதிதாக ஊழியர்களை எடுப்பதிலும் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் சுமார் 5.1 சதவிகிதம் அளவுக்கு ஊழியர்கள் அதிகமாக புதிதாக வேலைக்கு எடுத்து இருக்கிறார்களாம்.
பயிற்சி எண்ணிக்கை
2019 ஆம் ஆண்டில் இதுவரை, சுமார் 51,000 ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து இருக்கிறார்களாம். இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில், தற்போது சந்தையில் புதிதாக வந்திருக்கும் கிளவுட், பிக் டேட்டா போன்ற துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுத்து இருக்கிறார்களாம்.
வடி கட்டல்
இத்தனை திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தன்னை வளர்த்துக் கொள்வதற்கான விஷயங்களை எல்லாம் செய்தபின் தான் ஒரு லட்சம் பேரில் 500 பேரை வடிகட்டி வீட்டிற்கு அனுப்புகிறார்கள் என்பதை கேட்கும்போது கொஞ்சம் ஆறுதலாக தான் இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்த கம்பெனிகளில் கதை வேறாக இருக்கிறது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சுமாராக 12,000 பேரை வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். மூத்த மேலாளர்களாக பணியாற்றும் சம்பள படி நிலை 6-ல் இருக்கும் ஊழியர்களில் 10 சதவிகித ஊழியர்களை, வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். சம்பளப் படி நிலை 6, 7 மற்றும் 8-ல் சுமாராக 30,000 பேர் வேலை பார்க்கிறார்கள். இதில், சுமாராக 2,200 பேர் வரை தங்கள் வேலையை இழக்கலாம் என்கிறார்கள்.
உயர் பதவியினர்கள்
சம்பள படி நிலை 6, 7, 8-ல் பலரை வேலையை விட்டு நீக்குவது போக, சம்பள படி நிலை 4 மற்றும் 5-ல் இருந்தும் பல மூத்த அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். இந்த எண்ணிக்கை சுமார் 10,000 பேரைத் தொடலாம் என்கிறது நியூஸ் 18 நிறுவனத்தின் ஆங்கில செய்திகள்.
மிக உயர் அதிகாரிகள்
கீழ் நிலை மற்றும் இடை நிலை ஊழியர்கள் போக, பெரிய பதவியில் இருக்கும் 50 அதிகாரிகள், வேலையை விட்டு நீக்கப்பட இருக்கிறார்களாம். இவர்கள் எல்லாம் உதவித் துணைத் தலைவர், துணைத் தலைவர் போன்ற பெரிய பதவிகளில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு இந்திய நிறுவனம் என்பதாலேயே, இந்த நிறுவனத்தில் அதிக இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். ஆக பாதிப்படைய இருப்பவர்களில் பலரும் இந்தியர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்ஃபோசிஸ் தரப்பு
"வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்புவது ஒரு சாதாரண விஷயம் தான். நன்றாக செயல்படும் நிறுவனத்தில் இவைகள் எல்லாம் அவசியமாகிறது" எனச் சொல்கிறது இன்ஃபோசிஸ் தரப்பு. இந்த செய்தி வெளியான பின் இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை நேற்று சுமாராக 1.9 சதவிகிதம் வரை சரிந்தது. ஆனால் இன்று மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. தற்போது சுமாராக 712 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
காக்னிசண்ட்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து காக்னிசண்ட் நிறுவனத்தில் 7,000 பேரை வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். 5,000 ஊழியர்களுக்கு புதிய வேலைகளை கொடுக்க இருக்கிறார்களாம். இந்த நிறுவனத்திலும் ஒரு கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். எனவே இதிலும் நம் இந்தியர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படலாம்.
காக்னிசண்ட் தரப்பு
காக்னிசண்டின் நிறுவனத்தின் செலவைக் குறைக்கவும், காக்னிசண்ட் நிறுவனத்தை, அதன் வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்க வைக்கவும் சுமார் 7,000 பேரை வேலையில் இருந்து நீக்கி, வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். இதை காக்னிசண்ட் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி (CFO) கரன் மெக்லூக்லின் (Karen McLoughlin) சொல்லி இருக்கிறார்.
எப்படி எதிர்கொள்வோம்
இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படி ஐடி ஊழியர்கள் தங்கள் வேலையில் நிலையற்ற தன்மையை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்று தெரியவில்லை. சொல்லப் போனால், ஐடி துறையைத் தாண்டி இப்போது ஃபயர் செய்வது மற்றும் திடீரென கொத்தாக ஆட்களை வெளியேற்றுவது போன்ற விஷயங்கள், எல்லா துறைகளும் இந்தியாவில் சகஜமாகி பரவிக் கொண்டு இருக்கின்றன. இதை நாம் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்..? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.