சில காலமாகவே தொடர்ந்து IT துறையில் layoff என்று சொல்லப்படுகிற பணிநீக்கம் நடந்து வருகிறது. இந்த பணிநீக்கம் அந்தந்த ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை மட்டுமின்றி ரியல் எஸ்டேட் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வந்ததைப் பார்த்தோம். ஆனால் தற்போது நிறுவனங்கள் செய்யும் பணிநீக்கத்தினால் ரியல் எஸ்டேட் துறையிலும் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூர், பூனே மட்டுமின்றி ஹைதராபாத் போன்ற பெருநகரங்களிலும் வீடு வாங்குவோரின் எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளது. இதனால் விற்பனை செய்யப்படாத வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அப்படி என்னதான் நடக்கிறது ஐடி துறையில்?: ஐடி நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை ஊழியர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் IT ஊழியர்கள் ஒரு பாதுகாப்பாற்ற மன நிலையிலேயே பணிக்குச் சென்று வீடு திரும்புகின்றனர். சமீபத்தில் கூட அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆரக்கிள் (Oracle) நிறுவனம் 12,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது.
இனிவரும் காலத்திலும் இதே நிலை தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி இந்தியாவின் முன்னணி IT நிறுவனமாகத் திகழும் டிசிஎஸ் (TCS) 2026-ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 23,460 ஊழியர்களைக் குறைத்துள்ளது. இது போன்ற காரணத்தினால் IT ஊழியர்கள் தற்போது வீடு வாங்கினால் கடனைச் சரிவர அடைக்க முடியுமா? என்ற நிலைகுத் தள்ளப்பட்டுள்ளனர்.
நைட் ஃபிராங்க் இந்தியா (Knight Frank India) என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவின் மற்ற நகரங்களை விட IT நகரங்களாகத் திகழும் இடங்களில் விற்பனை செய்யப்படாத வீடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவித்தது. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் பெங்களூருவில் 23 சதவீத வீடுகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. தோராயமாக 71,611 வீடுகள் விற்பனை செய்யப்படாத நிலையில் இருக்கிறதாம். அதேபோல புனேவில் 12 சதவீதம் மற்றும் ஹைதராபாத்தில் 3 சதவீத வீடுகள் இன்னும் விற்பனையாகாமல் இருப்பதாக அறிக்கை தெரிவித்திருக்கிறது.
அனராக் நிறுவனமும் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் விற்பனை சரிவு ஏற்பட்டது தெள்ளத் தெளிவாக பதிவாகி இருந்தது. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வீடு விற்பனை புனேவில் 3 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதேபோல ஹைதராபாத்தில் 4 சதவீத சரிவை சந்தித்திருக்கிறது. பெங்களூருவிலும் வீடு விற்பனை எந்தவித வளர்ச்சியும் இல்லை.
IT துறையில் நிலவும் இந்த மந்த நிலையின் காரணமாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட வீடுகளும் ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டும் விற்பனை செய்யப்படாத வீடுகள் 3 முதல் 4 சதவீதம் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி பல சவால்கள் ரியல் எஸ்டேட் துறையைப் புரட்டி போட்டாலும் GCC-களின் வரத்து தற்போது அதிகமாகியுள்ளது தெரிய வருகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை விரிவுபடுத்த இந்தியாவில் அலுவலக இடங்களைத் தேடி வருகின்றனர். அதற்காக சில நிறுவனங்கள் இடங்களை வாடகைக்கு எடுத்து வருகின்றன. இனிவரும் காலத்திலும் வீடு விற்பனை சரிவு தொடருமா? அல்லது உயருமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications