கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 1.5 லட்சம் சம்பளத்தில் ஐடியில் பணிபுரிந்து கொண்டிருந்த பஞ்சாபி சர்தார் ஒருவர் தற்போது 199 ரூபாய்க்கு அன்லிமிட் பீட்சா விற்கும் கடை முதலாளியாக மாறியுள்ளார்.
பஞ்சாபை சேர்ந்த மொஹபத் தீப் சிங் என்பவர் தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இவர் ஐடி நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார்.
ஆரம்பத்தில் 5,000 ரூபாய் பணியில் சேர்ந்த இவர் படிப்படியாக முன்னேறி 1.5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்றுள்ளார். டென்மார்க், நார்வே உள்ளிட்ட 35 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் இவரது வாழ்க்கை திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பால் மாறியது. இன்று அவர் சொந்த ஊரான பஞ்சாபில் பீட்சா விற்கும் கடை முதலாளியாக உள்ளார்.
ஐடி ஊழியர்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மொஹபத் தீப் சிங் என்ற தொழில்நுட்பத்துறை பட்டதாரி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், விப்ரோ, டெல், பார்க்லேஸ் உள்பட உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். உலகின் 35 நாடுகளில் இவர் பல முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார். ரூ.5000 முதல் ரூ.1.5 லட்சம் சம்பளம் வாங்கும் மேலாளராக பதவி உயர்ந்த இவர் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது தனது வேலையை இழந்தார்.
சொந்த தொழில்
இதனையடுத்து அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு திரும்பி விவசாயம் செய்ய தொடங்கினார். அதன் பிறகு ஏதாவது சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டார். டெல்லியில் இருப்பது போல் டிரக்கில் வைத்து உணவு விற்கும் கடை எதுவும் பஞ்சாபில் இல்லை என்பதை தெரிந்து கொண்ட அவர் டிரக்கில் பீட்சாவை விற்பனை செய்யும் கடையை தொடங்க முடிவு செய்தார்.
பீட்சா ஃபேக்டரி
பஞ்சாபிலிருந்து அம்ரிஸ்டர் செல்லும் வழியில் உள்ள டோல் பிளாசா அருகில் ஒரு மஞ்சள் நிற டிரக்கை சமையல் அறையாக மாற்றி பீட்சா ஃபேக்டரி என்ற பெயரில் உணவகத்தை மொஹபத் தீப் சிங் தொடங்கினார். சுவை நன்றாக இருந்ததால் தொடங்கிய சில நாட்களிலேயே அவருடைய பீஸ்ஸாக்கள், பாஸ்தா, பர்கர்கள், ரேப்கள் மற்றும் சில தயாரிப்புகள் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
ரூ.199க்கு அன்லிமிட்
நம்மூரில் அன்லிமிட் சாப்பாடு வழங்கப்படுவது போன்று தனது பீட்சா ஃபேக்டரியில் அவர் அன்லிமிட் பீட்சாவை ரூ.199க்கு வழங்கினார். அதற்கு அவர் விதித்த இரண்டு நிபந்தனைகள் ஒன்று உணவை வீணாக்கக் கூடாது, இரண்டாவது பார்சல் இல்லை என்பதுதான்.
வியாபாரம் அதிகரிப்பு
ரூபாய் 199 ரூபாய்க்கு அன்லிமிட் பீட்சா என்ற இவரது அறிவிப்பு அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது. 199 ரூபாய் கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் பீட்சாக்களை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற திட்டம், அந்த பகுதி மக்களை கவர்ந்த நிலையில் ஏராளமானோர் அவருடைய கடைக்கு குவிந்தனர். இதனால் அவருக்கு வியாபாரம் அதிகரித்தது.
விரிவுபடுத்த திட்டம்
ரூ.1.5 லட்சம் சம்பளம் பெற்ற ஐடி பணியில் தனக்கு கிடைக்காத நிம்மதி தற்போது சொந்த தொழிலில் கிடைத்துள்ளதாகவும், இதில் மனநிறைவு அடைவதாகவும் அவர் கூறினார். மேலும் 199 ரூபாயில் தன்னுடைய சொந்த ஊர் மக்களின் பசியைப் போக்கி வருவதாகவும் இந்த கடையை இன்னும் விரிவு படுத்த வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது பீட்சா பேக்டரி அந்த பகுதியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருவதை அடுத்து விரைவில் அவர் பஞ்சாபின் வேறு சில பகுதிகளிலும் கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications