நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஐடிசி பட்ஜெட் அறிக்கையில் அறிவித்த வரி உயர்வின் காரணமாகச் சிக்ரெட் விலையை 20 சதவீதம் வரையில் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் ஏற்கனவே ஓட்டையான புகைப் பிடிப்பவர்களின் பர்ஸ் தற்போது பெரிய ஓட்டையாகப் போகிறது.
இதிலும் குறிப்பாக மக்கள் அதிகம் புகைக்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சிகரெட் மீதான விலையை அதிகப்படியாக உயர்த்த ஐடிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பட்ஜெட்
பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்படும் National Calamity Contingent Duty (NCCD) வரியானது 11 சதவீதம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் சிக்ரெட் மீது விதிக்கப்படும் மொத்த வரியின் அளவு தற்போது நீளத்திற்கு ஏற்றப்படி 212% முதல் 388% வரையில் வரி உயர்ந்துள்ளது.
ஐடிசி நிறுவனம்
பட்ஜெட் அறிவிப்பின் எதிரொலியாக ஐடிசி நிறுவனம் தற்போது சிகரெட் விலையை 10 முதல் 20 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் 4 சிக்ரெட்களில் 3 ஐடிசி நிறுவனத்தின் தயாரிப்பு தான், அந்த அளவிற்கு ஆதிக்கம் செய்யும் ஐடிசி நிறுவனத்தின் விலை உயர்வு நாட்டு மக்களைப் பெரிய அளவில் பாதிக்கும்.
விலை உயர்வின் விபரம்
ஐடிசி நிறுவனம் பல பிராண்டுகளில் சிக்ரெட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதில் ப்ரீமியம் பிரிவில் இருக்கும் சிகரெட்கள் மீது 10 சதவீத வரியும், நடுத்தர அளவிலான (Regular Size) 69mm அளவு கொண்ட சிக்ரெட் மீது 14-16 சதவீத விலை உயர்வும், 64mm அளவு கொண்ட ஸ்மால் சிக்ரெட் மீது 12-20 சதவீத விலை உயர்வை பிராண்டுக்கு ஏற்றாற் போல் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
பங்கு விலை
விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் ஐடிசி நிறுவன பங்குகள் சற்றுக் கணிசமாக உயர்ந்துள்ளது. குறைவான உயர்வுக்குக் காரணம் விலை உயர்வினால் இந்நிறுவனத்தின் விற்பனை அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையைக் கைவிட்டு உள்ளனர்.