இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் சீசன் தொடங்கிவிட்டது. இதற்கான ITR-1 மற்றும் ITR-4 படிவங்களுக்கான எக்செல் பயன்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படிவங்களை யாரெல்லாம் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாம் என தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யக் காத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருமான வரித் துறை 2026-27 மதிப்பீட்டு ஆண்டுக்கான (AY) ITR-1 மற்றும் ITR-4 படிவங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. எனவே உங்கள் வருமான வரிக் கணக்கை எந்தத் தாமதமும் இல்லாமல் உடனே தாக்கல் செய்யலாம்.

வருமான வரி அறிக்கை (ITR) என்பது வரி செலுத்துவோர் தங்கள் வருமான விவரங்கள், கோரப்பட்ட வரி விலக்குகள், ஏற்கனவே செலுத்தப்பட்ட வரிகள் மற்றும் செலுத்த வேண்டிய வரிப் பொறுப்புகள் ஆகியவற்றை வருமான வரித் துறைக்கு வெளிப்படுத்தும் ஒரு ஆவணமாகும்.இதற்கான இ-ஃபைலிங் போர்ட்டலில் எக்செல் பயன்பாடு மற்றும் ஆன்லைன் தாக்கல் ஆகிய இரண்டு விருப்பங்களும் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இந்த வசதி இன்று, மே 15 முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ITR-1 மற்றும் ITR-4 படிவங்கள் பெரும்பாலும் சம்பளம் அல்லது சிறு வணிகம் மூலம் வருமானம் ஈட்டுபவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
ITR-1 என்பது ஆண்டு வருமானம் ரூ. 50 லட்சம் வரை உள்ளவர்களுக்கும், அவர்களின் வருமான ஆதாரம் சம்பளம், ஒரு வீடு அல்லது வட்டி போன்ற பிற ஆதாரங்களாக இருப்பவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.
அதேபோல, ITR-4 என்பது மொத்த வருமானம் ரூ. 50 லட்சம் வரை உள்ள தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUF மற்றும் நிறுவனங்களுக்கும், வணிகம் அல்லது தொழில் மூலம் தங்கள் வருமானத்தை ஈட்டுபவர்களுக்கும் உரியது.
நீங்கள் இணையதளத்தில் நேரடியாகத் தகவல்களை உள்ளிட விரும்பினால், ஆன்லைன் முறையைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஆஃப்லைனில் வேலை செய்ய விரும்பினால் எக்செல் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். இந்த இரண்டு முறைகளும் இப்போது முழுமையாகச் செயல்படுகின்றன. மக்கள் கடைசிநால் வரை காத்திருக்காமல் வருமான வரி கணக்கு தாக்கல் பணிகளை தொடங்குவது நல்லது.
இந்த முறை கணக்கு தாக்கலில் பல மாற்றங்கள் வந்துள்ளதால் முன் கூட்டியே பணியை தொடங்கினால் கடைசி நேர பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும்.


Click it and Unblock the Notifications

