நடப்பு நிதியாண்டிற்கு வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் வரி செலுத்துவோர் பரபரப்பாக தயாராகி வருகின்றனர். ஏனெனில் தனி நபர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31. தற்போது வரையில் 2.2 கோடிக்கும் அதிகமான நபர்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். அதில் 1.33 கோடி ஐடிஆர்-கள் ஏற்கனவே ப்ராசஸ் செய்யப்பட்டுவிட்டன. இந்த ஆண்டு வருமானவரி தாக்கல் செய்த பலருக்கு 7 முதல் 10 நாட்களுக்குள் ரீஃபண்ட் பணமும் கைக்கு வந்துவிட்டது.
வருமான வரி ரீஃபண்ட் என்றால் என்ன?: நீங்கள் வரி செலுத்தும் தனிநபர் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நிதியாண்டில் உங்களுக்கு குறிப்பிட்ட தொகை வரி வந்திருக்கும். ஆனால் அந்த தொகையை விட அதிகமாக நீங்கள் வரி செலுத்தியிருந்தால் அந்த தொகையை வருமானவரித்துறை உங்களுக்கு ரீஃபண்டாக வழங்கி விடும். இதைத்தான் ஐடிஆர் ரீஃபண்ட் என்று கூறுகிறோம்.
டிடிஎஸ் மற்றும் அட்வான்ஸ் டாக்ஸ் என்ற பெயரில் சில வரி செலுத்துபவர்கள் கூடுதல் வரியை செலுத்தி இருப்பார்கள். அதை இந்த ரீபண்ட் செயல்முறை மூலமாக வருமானவரித்துறையிடம் இருந்து திரும்பப் பெற முடியும்.

ரீஃபண்ட் தொகை வங்கி கணக்கிற்கு வர எத்தனை நாட்கள் எடுக்கும்?: வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்த பிறகு, அதிகாரிகள் உங்கள் ஐடிஆ-ரை சரி பார்ப்பார்கள். இந்த செயல்முறை முடிந்ததும் 4 முதல் 5 வாரங்களுக்குள் ரீஃபண்ட் தொகை உங்கள் அக்கவுண்டிற்கு வந்துவிடும்.
சில நிதி நிபுணர்கள் உங்களுடைய ஐடிஆர் படிவம் துல்லியமாக இருந்தால் 7 முதல் 10 நாட்களுக்குள் ரீஃபண்ட் பணம் வந்துவிடும் என்று கூறுகின்றனர். அதுவே வரி தொடர்பான விபரங்களில் பிரச்சனை இருந்தால் ரீஃபண்ட் வருவதற்கு 1 மாதத்திற்கும் மேல் எடுக்கும். 2026-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் 6.97 கோடி ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்டது.
தாக்கல் செய்யப்பட்ட ரிட்டன்களில் சில சந்தேகத்திற்கிடமான விபரங்கள் தென்பட்டதால் கடந்த வருடம் ரீஃபண்ட் தொகை வருவதற்கு தாமதமானது. ஆனால் நீங்கள் துல்லியமாக ஐடிஆர் தாக்கல் செய்திருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. சரியான நேரத்தில் உங்கள் அக்கவுண்டிற்கு ரீஃபண்ட் தொகை வந்துவிடும்.
ரீஃபண்ட் வந்து விட்டதா என்பதை சரி பார்ப்பது எப்படி?: அதற்கு தனி நபர்கள் தாக்கல் செய்து முடித்தவுடன் வருமானவரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான "https://www.incometax.gov.in/iec/foportal/" என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் உங்களுடைய போன் நம்பர், யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
"e-File" என்ற பகுதிக்குச் சென்று > Income Tax Returns > View Filed Returns என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். டிஸ்ப்ளேவில் தோன்றும் பக்கத்தில் உங்களுடைய ரீஃபண்ட் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ள முடியும். அதில் அண்டர் ப்ராசசிங், பார்ஷியல் ரீஃபண்ட் அட்ஜஸ்டெட், ஃபுல் ரீஃபண்ட் அட்ஜஸ்டேட் அல்லது ரீஃபண்ட் பெய்லியர் போன்ற ஸ்டேட்டஸ் காண்பிக்கும்.
சரியான நேரத்தில் ரீபண்ட் தொகையை பெற வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும். உங்கள் பான் கார்டு பிளாக் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல உங்கள் பான் கார்டும், ஆதார் கார்டும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் பான் கார்டில் இருக்கும் பெயர் மற்றும் வங்கி கணக்கில் இருக்கும் பெயர் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். உதாரணமாக பான் கார்டில் தந்தை பெயரும் வங்கி கணக்கில் கணவர் பெயரும் இருந்தால் ரீபண்ட் தொகை பெறுவதில் பிரச்சனை ஏற்படும். IFSC கோட் சரியாக இருக்கிறதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்!


Click it and Unblock the Notifications
