தனிநபர்கள் வருமான வரி செலுத்துவதற்கு இன்றோடு சேர்த்து வெறும் 6 நாட்களே உள்ளது. அப்படி இருக்கையில் வருமான வரி ரீஃபண்ட் பெறுபவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸிங் தகவல் வெளியாகியுள்ளது. சிலர் ITR தாக்கல் செய்த வெறும் 24 மணி நேரத்திலேயே ரீஃபண்ட் தொகையையும் பெற்றுள்ளனர். இன்னும் சிலருக்கு ஐடிஆர் தாக்கல் செய்த ஒரு சில மணி நேரங்களிலேயே அவர்களுடைய அக்கவுண்டில் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐடிஆர் தாக்கல் செய்த போது.. ரீஃபண்ட் தொகை வந்து சேர 90 முதல் 100 நாட்கள் வரை எடுத்தது. ஆனால் இப்போது வெறும் 24 மணி நேரத்திற்குள்ளேயே ரீஃபண்ட் தொகையை பெற்று வருகின்றனர்.
1 நாளில் கிடைத்த ரீஃபண்ட் தொகை: கடந்த ஆண்டு ITR தாக்கல் செய்த பலருக்கு ரீஃபண்ட் தொகை வருவதற்கு 90 நாட்கள் எடுத்தது. ஆனால் இந்த ஆண்டு இதை சரி செய்ய வருமானவரித்துறை பல முயற்சிகளை எடுத்து 24 மணி நேரத்திற்குள் ரீஃபண்ட் தொகையை வழங்கி வருகிறது.

ஈ-வெரிஃபிகேஷன் செயல்முறை முடிந்த கையோடு 1 நாளில் தங்கள் கணக்கில் ரீபண்ட் தொகை வரவு வைக்கப்பட்டதாக சிலர் சோசியல் மீடியா தளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். கடந்த முறை இந்த ப்ராசஸ் தொடங்குவதற்கே 30 முதல் 40 நாட்கள் வரை எடுத்தது.
வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் ஒரே நாளில் ரீஃபண்ட் கிடைக்குமா?: தற்போதைய சூழலை வைத்து எதையும் கூறிவிட முடியாது. ஒருவரின் தனிப்பட்ட வரி கணக்கு மற்றும் சரிபார்ப்பு செயல்முறை ஆகியவற்றை பொறுத்து தான் ரீஃபண்ட் கிடைக்கும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. கடந்த முறை இருந்ததைவிட இந்த முறை சற்று வேகமாகவே ரீஃபண்ட் செயலாக்கம் நடந்து வருகிறது.
இந்த முறை ITR தாக்கல் செய்த சிலர் ரூ.50,000த்திற்கும் மேலான ரீஃபண்ட் தொகை தனக்கு 24 மணி நேரத்திற்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர். ஒரு நபர் ஜூலை 20-ஆம் தேதி அன்று, மதியம் 3.57 மணியளவில் வரி தாக்கல் செய்திருக்கிறார். அவருக்கு ஜூலை 21-ஆம் தேதி காலை 11 மணியளவில் ரீஃபண்ட் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் அதே நபர் வரி தாக்கல் செய்யும்போது அவருக்கு 15 நாட்கள் கழித்து தான் ரீஃபண்ட்தொகை கிடைத்தது.
இதுவரையில் 90 நாட்கள் வரை எடுத்து.. அதன் பிறகு செயலாக்கம் எல்லாம் முடிந்து அக்கவுண்டுக்கு வந்த தொகை இப்போது பெரும் 24 மணி நேரத்திலேயே கிடைப்பது உண்மையிலேயே வரி செலுத்துவோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக தான் இருக்கிறது. முன்பை விட டிஜிட்டல் வளர்ச்சி இப்போது வேகம் எடுத்துள்ளது.
எப்படி இது சாத்தியம்?: தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வருமான வரித்துறையும் தங்கள் செயல்பாடுகள் அனைத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளது.இதில் பெரும்பாலான செயல்முறைகள் ஆட்டோமேஷன் முறையில் நடப்பதால் முன்பை விட வேகமாக ரீஃபண்ட் தொகை கிடைத்து வருகிறது.
இதற்கு முன்னர் வரை Excel மட்டுமே அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு மாற்றாக ஜாவாஸ்கிரிப்ட் ஆப்ஜெக்ட் நொட்டேஷன் என்று சொல்லப்படுகிற JSON தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் டேட்டா ப்ராசசிங் இன்னும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் வரி செலுத்துபவர் தன் வரி கணக்கை தாக்கல் செய்து முடித்த சில நிமிடங்களிலேயே அடுத்த கட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு விடுகின்றன.
வரி செலுத்துபவர் ரீஃபண்ட் பெற தகுதியுடையவர் என்றால் அவர் வரி தாக்கல் செய்தவுடன் அதற்கான செயலாக்கம் தொடங்குகிறது. வருமானவரித்துறை தங்களுடைய செயல்பாடுகள் அனைத்தையும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி இருந்தாலும்.. வரி செலுத்துபவர்கள் தங்கள் தரப்பில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அதற்கு வங்கி கணக்கை சரி பார்ப்பது, பான், ஆதார் கார்டு இணைப்பது போன்ற விஷயங்களை எல்லாம் செய்து வைத்தால் ரீஃபண்ட் விரைவில் கிடைத்து விடும்.


Click it and Unblock the Notifications