சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமத்தின் முன்னாள் தலைவரா ஜாக் மா, தனது நிதியியல் சேவை வர்த்தகப் பிரிவான ஆன்ட் குரூப் நிறுவனத்தைச் சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தையில் ஓரே நேரத்தில் பட்டியலிட்டு சுமார் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ வெளியிட்டு வரலாற்றுச் சாதனையைப் படைக்கும் முயற்சியில் இருந்த நிலையில், சீன அரசு இந்நிறுவன ஐபிஓ-விற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
சீன அரசின் இந்த நடவடிக்கைக்கு முதலும் முக்கியம் காரணம் ஜாக் மா என்பது தான் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் மிக்பெரிய பிரச்சனையாக உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு ஷாங்காய் நகரில் நடந்த ஒரு முக்கியமான பின்டெக் மாநாட்டில் சீனா வங்கியியல் முறை பற்றித் தவறான கருத்தை முன்வைத்தார். இவரது கருத்து சீன அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் காதுகளுக்குச் சென்றது பிரச்சனை பெரியதாக வெடித்துள்ளது.
ஜாக் மா
பின்டெக் மாநாட்டில் பேசிய ஜாக் மா Global banking Basel Accords அமைப்பை வயதானவர்களின் கிளப் என்றும், சீனாவின் பைனான்சியல் எகோசிஸ்டம்-ஏ இல்லை என்றும், சீனா வங்கிகள் ஒரு அடகுக் கடை போல் இயங்குகிறது எனப் பல கருத்துக்களை முன்வைத்து சீன அரசை சாடியுள்ளார்.
மேலும் சீன வங்கிகளுக்குத் துணை ஈடு மற்றும் உத்தரவாதங்கள் தான் உண்மையான பணம் என நம்புகிறது. இது முற்றிலும் தவறு என்றும் பேசினார் ஜாக் மா.
ஸ்பெஷல் ஐட்டம்
இவை அனைத்திற்கும் மேலாகச் சீன அரசை கோபம் அடைய செய்தது இது தான், அந்த மாநாட்டில் ஜாக் மா,'ஒரு சீனராக நான் கூற விரும்புவதும், சீன வங்கியில் 1 லட்சம் யுவான் கடன் வாங்கினால் நீங்கள் பயப்பட வேண்டும், 10 லட்சம் யுவான் கடன் வாங்கினால் வங்கியும், நீங்களும் பயப்பட வேண்டும், இதுவே 1 பில்லியன் யுவான் கடன் வாங்கினால் நீங்கள் எந்தக் கவலையும் படத் தேவையில்லை, வங்கிகள் தான் பயப்பட வேண்டும்' என்று ஜாக் மா கூறினார்.
இதுதான் சீனா அரசைக் கடுமையாகத் தாக்கியுள்ளது.
சீன அரசு
இதன் எதிரொலியாகக் கோபமடைந்த சீன அரசு ஆன்லைன் மைக்ரோ கடன் சேவை நிறுவனங்கள் மற்றும் இத்துறை வர்த்தகம் மீது சீன நிதியியல் துறையின் உயர் அதிகாரிகள் கடுமையான மூலதனம் மற்றும் இயக்க விதிமுறைகளை விதித்தனர்.
இந்த விதிமுறைகளை உடனடியாக அமலாக்கம் செய்யச் சீன அரசும் உத்தரவிட்ட நிலையில் இரவோடு இரவாக ஆன்ட் குரூப் ஐபிஓ-விற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தைகள்
சீன அரசு புதிய விதிமுறைகளை மாற்றியுள்ள காரணத்திற்காக ஆன்ட் குரூப் வர்த்தகத்தைப் புதிய விதிமுறையின் கீழ் ஆய்வு செய்து ஒப்புதல் கிடைத்த பின்னரே ஐபிஓ-விற்கு ஒப்புதல் அளிக்க முடியும். எனவே ஷாங்காய் பங்குச்சந்தை ஆன்ட் குரூப் ஐபிஓ-விற்குத் தற்காலிக தடை விதித்து.
ஷாங்காய் பங்குச்சந்தை அறிவித்த அடுத்தச் சில மணிநேரத்தில் சீன கட்டுப்பாட்டில் இருக்கும் ஷாங்காய் அரசும் ஆன்ட் குரூப் ஐபிஓ-விற்குத் தடை விதித்தது.
அமெரிக்கா
இதன் எதிரொலியாகச் செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தையில் அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் 8.13 சதவீதம் சரிந்து 285.57 டாலராகக் குறைந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
சீன வங்கிகள்
ஜாக் மா கூறியது சீன அரசைக் கோபம் அடையச் செய்தாலும், அதில் உண்மையும் உண்டு. பொதுவாகச் சீன வங்கிகள் சிறிய அளவிலான தொகையைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்து வருகிறது. பெரிய தொகை, பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே கடனை வாரி வழங்குகிறது.
இதனால் சிறு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் வங்கியில் கடன் பெறுவது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.
மைக்ரோ கடன் சேவை
இந்த பிரச்சனையை மையமாக வைத்துத் தான் ஜாக் மா தனது ஆன்ட் குரூப் நிறுவனத்தின் மூலம் மைக்ரோ கடன் சேவை துவங்கி பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளார்.
ஆன்ட் குரூப்-ன் வளர்ச்சி சீன வங்கிகளைப் பாதிக்கும் என்ற காரணத்திற்காகவும் சீன அரசு இதைச் செய்திருக்கும் எனக் கருத்தும் நிலவுகிறது.