டெல்லி: உலகின் சொகுசு ரக கார்களுடன் போட்டி போட, இந்திய நிறுவனங்கள் இருக்கிறது என்றால் அது டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் தான். ஆடி, பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற சொகுசு கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன், இந்தியாவின் டாடா குழுமமும் கார் விற்பனையில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.

ஆனால் சமீபத்தில் வெளியாகி இருக்கும், ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை அத்தனை சிறப்பாக இல்லை. அக்டோபர் 2019 மாதத்துக்கான ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை விவரங்கள் இன்று வெளியானது.
அதில் அக்டோபர் 2018-ல் ஆன மொத்த ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனையை விட, கடந்த அக்டோபர் 2019-ல் 5.5 சதவிகித விற்பனை சரிவாம். எண்ணிக்கையில் பார்த்தால் அக்டோபர் 2019-ல் ஜாகுவார் லேண்ட் ரோவர் என இரண்டு பிராண்டுகளையும் சேர்த்து 41,866 கார்களைத் தான் விற்று இருக்கிறார்களாம். ஆனால், கடந்த அக்டோபர் 2018-ல் 44,302 கார்களை விற்று இருந்தார்களாம்.
இந்த அக்டோபர் 2019-ல் ஜாகுவார் பிராண்ட் காரில் 10,606 கார்களை விற்று இருக்கிறார்களாம். இது கடந்த அக்டோபர் 2018-ஐ விட சுமாராக 23 சதவிகிதம் சரிவு. அதே போல அக்டோபர் 2019-ல் லேண்ட் ரோவர் பிராண்ட் காரில் 31,260 கார்களை விற்று இருக்கிறார்களாம். இது கடந்த அக்டோபர் 2018-ஐ விட சுமாராக 2.4 சதவிகிதம் சரிவு. எப்படியோ லேண்ட் ரோவர், விற்பனை பெரிய சரிவைக் காட்டாமல் காப்பாற்றி இருப்பதை அப்பட்டமாக பார்க்க முடிகிறது.
உலகம் முழுக்கவே ஆட்டோமொபைல் வர்த்தகம் சவாலானதாகவே இருக்கிறது. இந்த சூழலிலும், ஜாகுவார் லேண்ட் ரோவரின் விற்பனை, கடந்த நான்கு மாத காலமாக தொடர்ந்து சீனாவில் அதிகரித்து இருப்பதை சுட்டிக் காட்டுகிறார் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வணிக அதிகாரி ஃபிலிக்ஸ் ப்ராடிகம் (Felix Brautigam).
கடந்த மாதத்தில் சீனாவில் ஜாகுவார் லேண்ட் ரோவரின் விற்பனை 16.2 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. அதே போல இக்கிலாந்திலும் கடந்த மாதத்தில் 18.7% விற்பனை அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications