நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினை குறைக்க மக்கள் அத்தியாவசிய தேவை தவிர வெளியில் பயணிக்க வேண்டாம். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டாம். என மத்திய மாநில அரசுகள் மாறி மாறி பரிந்துரைத்து வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையன்று, மக்கள் ஊரடங்கினை அவர்களே செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
மக்களே ஊரடங்கு
என்ன தான் அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மக்கள் முடிந்த அளவு தங்களை தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேரடியாக வியாழக்கிழமையன்று தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த வைரஸினை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுகிழமையன்று மக்களே ஊரடங்கு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விமான சேவையை குறைக்க முடிவு
அதன்படி நாடு முழுவதும் 245 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னணி தனியார் விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம் ஞாயிற்றுகிழமையன்று மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவளிக்கும் விதமாக தனது உள்நாட்டு விமான சேவையில் 60% மட்டுமே இயக்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அவசர தேவைக்கு மட்டும் இடம்
ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து தேவை குறைந்து வருவதால், விமான சேவையை குறைத்துள்ளது. மேலும் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க ஞாயிற்றுகிழமையன்று தனது உள்நாட்டு விமான சேவையில் 60 சதவிகிதம் குறைக்க உள்ளதாகவும், இதோடு அந்த நாளில், மீதம் இயங்கும் விமான சேவையில் அவசர பயணத் தேவைகள் உள்ளவர்களுக்கு மட்டும் இடமளிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது.
மதிப்பாய்வு செய்யும்
ஏற்கனவே சர்வதேச விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக உள்நாட்டு விமான சேவையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது சற்று பின்னடைவை கொடுக்கும். எனினும் இண்டிகோ தேவைக்கு பொருந்தக்கூடிய திறனை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும் என்றும் அறிவித்துள்ளது.