தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது பிரபலமான ஐபோன்கள், ஐபேட் உள்பட தனது பல்வேறு தயாரிப்புகளை சீனாவில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மூலம் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வந்தது. கொரோனா, அமெரிக்கா-சீனா வர்த்தக போர் போன்ற காரணங்களால் ஆப்பிள நிறுவனம் தனது தயாரிப்புகளை வேறு நாடுகளுக்கு மாற்ற தொடங்கியது.
மேலும் இந்தியா மற்றும் வியட்நாமில் தங்களது தயாரிப்புகளை தயார் செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி தனது சப்ளையர்களிடம் வலியுறுத்தியது. இதனையடுத்து பல ஆப்பிள் சப்ளையர்கள் இந்தியாவில் தங்களது ஆலைகளை தொடங்கி வருகின்றன. தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் மு்க்கிய சப்ளையரான டிடிகே கார்ப்பரேஷன் இந்தியாவில் பேட்டரி செல் ஆலையை தொடங்க உள்ளது.

ஜப்பானை சேர்ந்த டிடிகே கார்ப்பரேஷன் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்களை சப்ளை செய்யும் முக்கிய வர்த்தகராக உள்ளது. இந்நிறுவனம் தனது லித்தியம் அயன் பேட்டரி ஆலையை ஹரியானாவில் அமைக்க உள்ளது.
இந்நிறுவனம் லித்தியம் அயன் செல்களை உருவாக்குவதற்காக படிப்படியாக ரூ.6,000-7,000 கோடி முதலீட்டில் ஒரு ஆலையை அமைக்கும் என்றும், அது முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தவுடன் சுமார் 7,000-8,000 பேரை வேலைக்கு அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமூக வலைதளமான எக்ஸில், ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்களை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக விளங்கும் டிடிகே கார்ப்பரேஷன், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்கான செல்களை தயாரிக்க ஹரியானாவின் மானேசரில் 180 ஏக்கர் இடத்தில் ஆலையை அமைக்கிறது.
இதனால் உள்நாட்டில் பல ஆயிரம் புதிய வேலைகள் உருவாக்கப்படும் மற்றும் உள்நாட்டில் மதிப்பு கூட்டல் அதிகரிக்கும் என்று பதிவு செய்து இருந்தார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் லித்தியன் அயன் பேட்டரி செல்கள் ஆப்பிள் தயாரிப்புகளில் உள்ளூர் மதிப்பு கூட்டலை மேம்படுத்தும். டிடிகே கார்ப்பரேஷன் நிறுவனம் உற்பத்தியை தொடங்க சுற்றுச்சூழல் அனுமதிக்காக காத்திருக்கிறது.
டிடிகே கார்ப்பரேஷன் நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், 2005ல் சீனாவை தளமாக கொண்ட லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி நிறுவனமான ஆம்பெரெக்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் (ஏ.டி.எல்.) நிறுவனத்தை வாங்கியது.
ஏ.டி.எல். நிறுவனம் தனது துணை நிறுவனமான நாவிதாசிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் இந்தியாவில் செயல்பட்டது. ஹரியானாவில் உள்ள பாவாலை மையமாக கொண்டு நாவிதாசிஸ் ரிச்சார்ஜபிள் பேட்டரி பேக்கேஜ்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது.


Click it and Unblock the Notifications