ஜப்பானின் முன்னணி ஆட்டோ நிறுவனமான சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் 10,440 கோடி ரூபாய் முதலீட்டினை, மின்சார வாகன உற்பத்திக்காக இந்தியாவில் செய்யவுள்ளது.
இதன் மூலம் மின்சார வாகன உற்பத்தி மற்றும் பேட்டரி உற்பத்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்காக சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் குஜராத் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 150 பில்லியன் யென் மின்சார வாகன உற்பத்திகாக முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குஜராத் ஆலை மேம்பாடு
இதில் மேற்கூறப்பட்ட முதலீட்டில் 2025ம் ஆண்டில் சுசுகி மோட்டார் குஜராத்தில் மின்சார வாகன உற்பத்தி திறனை அதிகரிக்க 3,100 கோடி ரூபாய் முதலீட்டினை செய்யவுள்ளதாகவும், 2026ம் ஆண்டில் மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகளை தயாரிக்கும் ஆலைக்காக 7300 கோடி ரூபாயும் செலவிடப்படும். மீதமுள்ள தொகை 2025 மாருதி சுசுகி டொயோட்சுவால் வாகன மறுசுழற்சி ஆலை நிறுவ பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபுமியோ கிஷிடா & மோடி தலைமையில் ஒப்பந்தம்
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற, இந்தியா - ஜப்பான் பொருளாதார கூட்டத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய கிஷிடா சுசுகியின் எதிர்கால நோக்கம் சிறிய கார்கள் மூலம் ஜீரோ கார்பன் உமிழ்வை அடைய உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து முதலீடு செய்வோம்
மேலும் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்வோம். இதன் மூலம் இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்வோம் என தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் ஜப்பான் - இந்தியா இடையேயான ஒப்பந்தம் மூலம் பேட்டரிகள், மின்சார வாகனங்கள், சார்ஜிங் நிலையங்கள், சோலார் எனர்ஜி உள்ளிட்ட பலவற்றையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புகள் பெருகும்
இதே அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா - ஜப்பான் இடையேயான முதலீடானது 3,20,000 கோடி ரூபாய் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.
நிச்சயம் இதுபோன்ற முதலீட்டு திட்டங்கள் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.