இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் இரண்டு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகன பிரிவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், அதற்கான ஏதுவான சூழ்நிலை நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா பெங்களூரில் முக்கியமான சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஹோண்டா நிறுவனம்
ஜப்பான் ஹோண்டா நிறுவனம் 3 சக்கர வாகனங்களுக்கான பேட்டரி ஸ்வாபிங் சேவையைப் பெங்களூரில் முதல் கட்டமாக வருகிற ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது ஹோண்டா. பேட்டரி ஸ்வாபிங் சேவை என்றால் எலக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரி தீர்ந்துவிட்டால் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வாகனங்களுக்கு மாற்றும் ஒரு சென்டர்.
பெங்களூர்
மேலும் இந்தியாவில் இந்தத் தேவையைப் பிற மாநிலங்கள், நகரங்களில் அறிமுகம் செய்வதற்கு முன்பாக நாட்டின் டெக் கேப்பிடல் ஆக விளங்கும் பெங்களூரில் 3 சக்கர வாகனங்களுக்கான பேட்டரி ஸ்வாபிங் சேவையைச் சோதனை செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.
2 சக்கர வாகனங்கள்
இந்த முதல்கட்ட சோதனை வெற்றி அடையும் பட்சத்தில் அடுத்தச் சில மாதங்களிலேயே 2 சக்கர வாகனங்களுக்கான பேட்டரி ஸ்வாபிங் சேவையை அறிமுகம் செய்யவும் அதன் பின் இந்தியாவின் பிற நகரங்களில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. ஹோண்டாவின் இந்தச் சேவை இந்திய EV சந்தையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக அரசு
இத்திட்டம் குறித்துக் கர்நாடக அரசின் தொழிற்துறை பிரிவு கமிஷ்னர் குன்ஜன் கிருஷ்ணா கூறுகையில், ஹோண்டா நிறுவனம் அடுத்த 18 மாதத்தில் 50 பேட்டரி ஸ்வாபிங் சென்டரை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பாக 7 பேட்டரி ஸ்வாபிங் சென்டரை அமைக்க உள்ளது எனத் தெரிவித்தார்.
மும்பை டூ பெங்களூர்
மேலும் ஹோண்டா நிறுவனம் முதலில் இத்திட்டத்தை மும்பையில் செயல்படுத்தவே திட்டமிட்டது, ஆனால் கடைசி நேரத்தில் பெங்களூரை தேர்வு செய்துள்ளது.