இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான சந்தை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள வேளையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் எஸ்யூவி கார்கள் தயாரிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது மட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் புதிய மாடல் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் இரு பெரும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இது கூட்டு முயற்சி சந்தையில் இருக்கும் சக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியாக மட்டும் அல்லாமல் வர்த்தகத்தைப் புரட்டிப்போடும் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது.
மாருதி சுசூகி - டொயோட்டா
ஜப்பான் சுசூகி நிறுவனத்தின் இந்திய கூட்டணி நிறுவனமான மாருதி சுசூகி மற்றும் ஜப்பான் டொயோட்டா ஆகிய இரு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் புதிய ப்ரீமியம் எஸ்யூவி கார் தயாரிப்பின் இறுதிக்கட்ட பணிகள் நடை பெற்று வருகிறது.
புதிய எஸ்யூவி கார்
இந்தக் கார் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், வோக்ஸ்வாகன் டிருவான் ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். மேலும் மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் இணைந்து டிசைன் முதல் உற்பத்தி வரையில் பணியாற்றி உள்ளனர், மேலும் இப்புதிய காருக்காக 1 வருடத்திற்கும் அதிகமாகப் பணியாற்றி வருகிறார்கள்.
முதல் முறை
இதுமட்டும் அல்லாமல் மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டு முயற்சியில் இந்தப் புதிய எஸ்யூவி கார் வடிவமைக்கப்பட்டாலும், டொயோட்டா தொழிற்சாலையில் தான் இந்தக் கார் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டணி முதல் முறையாக உருவாக மிக முக்கியமான காரணம் உண்டு.
வெறும் சாம்பிள் தான்
இந்தப் புதிய எஸ்யூவி கார் திட்டம் எல்லாம் வெறும் சாம்பிள் தான், இக்கூட்டணிக்கு மிகப்பெரிய திட்டம் வைத்துள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக், ஹைப்ரிட், கிரீன் எனர்ஜி கார்களை உருவாக்கவே இக்கூட்டணி முதல் முறையாக உருவாக்கப்பட்டு உள்ளது.
PLI திட்டம்
அதிலும் குறிப்பாக இந்தியாவில் எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் பியூயல் செல் கார்களைத் தயாரிக்க மத்திய அரசு சுமார் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான PLI திட்டத்தை அறிவித்துள்ளது. இதை அடைவதற்காகவே இப்புதிய கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.
26,000 கோடி ரூபாய்
மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டணி 26,000 கோடி ரூபாய் PLI திட்டத்தை அடையவே 1000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தப் புதிய எஸ்யூவி கார் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
வெற்றி
இந்தத் திட்டம் கிட்டத்தட்ட வெற்றி அடைந்த நிலையிலும், இரு நிறுவனங்கள் கூட்டணி பணிகளில் இருக்கும் பிரச்சனைகளும் களையப்பட்டு உள்ள நிலையில் PLI திட்டத்தில் பெரிய வாய்ப்பை பெற முடியும் என இப்புதிய கூட்டணி நம்புகிறது.