உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும் தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் இந்தியர்களாகவும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களான கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவை சேர்ந்தவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா இந்தியாவை சேர்ந்தவர்.
பெர்பிளெக்சிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்தியாவை சேர்ந்தவர் . இப்படி பல்வேறு டெக் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் எல்லாம் இந்தியர்களும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களும் தான் இருந்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இந்திய திறமைகளுக்கு வெளிநாடுகளில் பெருமளவில் மதிப்பு இருந்து வருகிறது . இந்த திறமைகள் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் இவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள் .

அண்மையில் ஹாரன் இந்தியா அமைப்பு இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சுந்தர் பிச்சை , சத்ய நாதெல்லா உள்ளிட்டோரை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரு பெண் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். அவர்தான் ஜெயஸ்ரீ உல்லால். அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர்தான் ஜெயஸ்ரீ உல்லால்.

பணக்கார இந்தியர்களின் பட்டியலில் இவர் 50,170 கோடி ரூபாய் சொத்து மதிப்போடு உலகின் பணக்கார இந்திய தொழில் முறை மேலாளராக இவர் முதலிடம் பிடித்திருக்கிறார். மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை போன்ற முக்கிய தொழில்நுட்ப ஜாம்பவான்களை விட இவர் முன்னிலையில் இருக்கிறார்.
லண்டனில் பிறந்தவர் தான் ஜெயஸ்ரீ உல்லால். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பட்டப்படிப்பை படித்து முடித்தவர். 2008 ஆம் ஆண்டு அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பதவியேற்றார். ஜெயஸ்ரீ உல்லால் இந்த நிறுவனத்தை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நெட்வொர்க் ஜாம்பவான்களுக்கு இணையாக உயர்த்தி இருக்கிறார். அரிஸ்டா நெட்வொர்க் என்பது பெரிய டேட்டா சென்டர்களுக்கான கிளவுட் நெட்வொர்க்கிங் சேவையை வழங்கக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தில் இவருக்கு மூன்று சதவீத பங்கு இருக்கிறது. இதுதான் இவரின் சொத்து மதிப்பு இப்படி பல மடங்கு உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம். ஜெயஸ்ரீ உல்லால் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்த பட்டியலில் சத்ய நாதெல்லா இரண்டாம் இடத்தில் உள்ளார். சத்ய நாதெல்லாவின் சொத்து மதிப்பு 9,920 கோடி ரூபாய் ஆகும். கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை 5810 கோடி சொத்து மதிப்புடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications