ஆண்கள் வேட்டி சட்டையில் இருந்தும், பெண்கள் சுடிதார், பாவாடை தாவணி இருந்தும் மாறி தற்போது அதிகளவில் ஜீன்ஸ் பேன்ட் அணிவது வாடிக்கையாக உள்ளது. இப்படி உலகம் முழுவதும் ஜீன்ஸ் மற்றும் டெனிம் ஆடைகளை விரும்பி அணிவதால் இது மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டும் பல ஜீன்ஸ் நிறுவனங்கள் திவாலாகியுள்ளது எத்தனை பேருக்கும் தெரியும். ஜீன்ஸ் மற்றும் டெனிம் ஆடை நிறுவனங்களின் திவாலால் டெக்ஸ்டைல் துறை சார்ந்த நிறுவனங்களும், வர்த்தகர்களும், இத்துறை சார்ந்த ஊழியர்களும் அச்சத்தில் உள்ளனர்.
ஜீன்ஸ் மற்றும் டெனிம் ஆடைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து திவால் ஆக என்ன காரணம்..?
திவால்
ஜீன்ஸ் மற்றும் டெனிம் ஆடைகள் விற்பனை பிரிவில் இருக்கும் உலகின் சில முன்னணி நிறுவனங்கள் தாங்கள் திவாலாகிவிட்டதாக அறிவித்துள்ளதுள்ளது. ஆம், ட்ரூ ரிலிஜியன், லக்கி பிராண்டு, ஜி ஸ்டார் ரா ஆகிய முன்னணி நிறுவனங்கள் கடந்த 6 மாத காலத்தில் திவாலாகி விட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்தது மட்டும் அல்லாமல் தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலைக்கு என்ன காரணம்..?
முதன்மையான காரணம்
நவம்பர் மாதத்தில் சீனாவில் மிகப்பெரிய அளவில் வெடித்த கொரோனா தொற்று இன்று வரையில் உலக மக்களை வாட்டிவதைக்கிறது. இக்காலகட்டத்தில் பல கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்தும், முழுமையான சம்பளம் பெறாமலும் தவித்து வரும் அதேவேளையில் மக்கள் அலுவலகத்திற்கோ, வெளியிலோ செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
வீட்டில் முடக்கம்
உலகளவில் தற்போது பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுவதாலும், வெளியில் எங்கும் சொல்ல முடியாத காரணத்தாலும் மக்கள் மத்தியில் ஜீன்ஸ் அணியும் வழக்கம் பெரும்பளவில் குறைந்துள்ளது. சொல்லப்போனால் முற்றிலும் குறைந்துள்ளது.
வர்த்தகம் அதிகளவிலான பாதிப்பு
இத்தகைய சூழ்நிலையில் ஜீன்ஸ் விற்பனை இந்தியா மட்டுமல்ல உலகளவில் குறைந்துள்ளது. பல நாடுகளிலும், பல முன்னணி விற்பனையாளர்களும் அதிகளவிலான தள்ளுபடி கொடுத்தும் விற்பனை செய்ய முயற்சி செய்தனர், ஆனாலும் வர்த்தகத்தில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லையெனச் சந்தை ஆய்வு நிறுவனங்கள் கூறுகிறது.
உற்பத்தி
சந்தையில் தேவை குறைந்துள்ளதாலும், உலக நாடுகளில் Work From Home காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாலும் ஜீன்ஸ் மற்றும் டெனிம் ஆடை உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் ஜீன்ஸ் மற்றும் டெனிம் ஆடைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆர்டரை இழந்தும், ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்தும் தவித்து வருகின்றது.
ஆடை விற்பனை
கொரோனா பாதிப்பிற்குப் பின் ஜீன்ஸ் மற்றும் டெனிம் ஆடை விற்பனை மளமளவெனச் சரிந்துள்ளது என NPD குரூப் நிறுவனத்தின் ஆடை துறை ஆய்வாளர் மரியா ரூகுலோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல டெக்ஸ்டைல் துறை நிறுவனங்கள் இக்கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ட்ரூ ரிலிஜியன், லக்கி பிராண்டு, ஜி ஸ்டார் ரா ஆகிய நிறுவனங்களுடன் அடுத்த சில மாதங்களில் பல டெக்ஸ்டைல் நிறுவனங்கள் திவாலாக வாய்ப்பு உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
வளர்ச்சி பாதை
100 வருடங்களாக மக்களின் வாழ்க்கையில் இருக்கும் ஜீன்ஸ் மற்றும் டெனிம் ஆடைகள் கொரோனாவால் பயன்பாட்டில் இருந்து நீங்கிவிடாது. இந்தக் காலக்கட்டத்தில் ஜீன்ஸ் மற்றும் டெனிம் ஆடை நிறுவனங்கள் பல புதிய வடிவங்களையும், பல புதிய ஆடை தயாரிப்பிலும் இறங்க வேண்டும்.
மேலும் கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்பு ஜீன்ஸ் மற்றும் டெனிம் விற்பனை நிச்சயம் சூடுபிடிக்கும் எனவும் மரியா ரூகுலோ தெரிவித்துள்ளார்.