பெருத்த கடன் பிரச்சனையால் தத்தளித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஒரு கட்டத்தில், கடனையும் திரும்ப செலுத்த முடியாமல், சம்பளத்தினையும் கொடுக்க முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது.
தனியார் விமானத் துறையிலேயே கணிசமான பங்குகளை கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ், அனைத்து விதமான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்த பிறகு, கடந்த ஆண்டு தனது சேவையினை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தினை ஏலத்தில் விட எஸ்பிஐ தலைமையிலான வங்கிக் குழு, தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
இறுதி கட்டத்தில் இரு ஒப்பந்தங்கள்
இதற்கிடையில் தற்போது ஜெட் ஏர்வேஸ் திவால் நிலையின் இறுதி நிலைக்கு எட்டியுள்ளது. ஏனெனில் ஜெட் ஏர்வேஸினை வாங்க இரண்டு ஏலதாரர்கள் இந்த வாரத் தொடக்கத்தில் திருத்தப்பட்ட திட்டங்களை சமர்பித்துள்ளனர். கடன் வழங்குனர்களுக்கும் இந்த இரண்டு ஏலதாரர்களுக்கும் இடையிலான பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்பே இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் சமர்பிக்கப்பட்டன.
விரைவில் முடிவுக்கு வரலாம்
இந்த நிலையில் கடன் வழங்குனர்கள் மேற்கொண்டு எந்த திருத்தங்களையும் கேட்காவிட்டால், விரைவில் அதாவது பதினைந்து நாட்களுக்குள் ஜெட் ஏர்வேஸூக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கலாம் என்றும் மணிகன்ட்ரோல் செய்திகள் கூறுகின்றன. உண்மையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் செயல்பட தொடங்கும் போது பல ஆயிரம் ஊழியர்கள் மீண்டும் தங்களது திரும்ப தங்களது வேலைகளையும் திரும்ப பெறுவர்.
பலத்த கடன் பிரச்சனை
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல வங்கிகளில் அதிகளவிலான கடன்களை பெற்றுள்ளது. இதில் எஸ்பிஐ வங்கி அதிகளவிலான கடனை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 8,000 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளில் கடன் பெற்றுள்ளது. மேலும் மற்ற கடன் மற்றும் ஊழியர்கள் என பலருக்கும் மொத்தம் 25,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் அந்த முதல் ஏலதாரர்
கடந்த ஆண்டு ஏப்ரல் 2019ல் தனது நடவடிக்கைகளை நிறுத்திய நிலையில், ஜூலை 21 அன்று இரண்டு ஏலதாரர்களை பெற்றது. இதில் முதலாவது Flight Simulation Technique Centre Pvt Ltd, Big Charter Pvt Ltd மற்றும் Imperial Capital Investments LLC ஆகும். இதில் fstc மற்றும் Big Charter இரண்டும் சஞ்சய் மண்டேவியா தலைமையிலானது. இம்பீரியல் கேப்பிட்டல் என்பது துபாயை தளமாகக் கொண்ட ஒரு முதலீட்டு வங்கி மற்றும் மேலாண்மை நிறுவனமாகும்.
இரண்டாவது ஏலதாரர்
இதே இரண்டாவது ஏலதாரர் லண்டனை அடிப்படையாகக் கொண்ட நிதி சேவை நிறுவனமான Kalrock Capital and entrepreneur Murari Lal Jalan ஆகும். எவ்வாறயினும் கடனை திரும்ப செலுத்துதல் தொடர்பான இரு திட்டங்களும், தங்கள் திட்டங்களில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.