இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வந்த ஜெட் ஏர்வேஸ், அதன் ஜூன் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அதன் படி முதல் காலாண்டில் 390.1 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 129 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த விமான சேவை நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் விகிதம் 83% குறைந்து, 12.53 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது இன்னும் ஆய்வில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்
கடந்த ஆண்டில் இதே ஜூன் காலாண்டில் 73.83 கோடி ரூபாய் வருவாயினை கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த வருவாய் விகிதம் 13.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 75.01 கோடி ரூபாயாக இருந்தது.
பணியமர்த்தல் நடவடிக்கை
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமீபத்தில் தான் புதியதாக பைலட்களை பணியமர்த்தும் பணியில் ஈடுப்பட்டது. இது ஏர்பஸ் A320 விமானங்கலை இயக்கவும், அதோடு போயிங்க் 737NG மற்றும் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்கவும் பணிக்கு ஆள்சேர்க்கை நடத்தியது.
அனுமதி சான்றிதழ்
ஜெட் ஏர்வேஸ் விமானத்தினை இயக்குவதற்கான அனுமதி சான்றிதழை இந்திய விமான போக்குவரத்து ஆணையரகத்திடம் கடந்த மே மாதம் பெற்றனர். இதற்கிடையில் தான் விமானத்தினை இயக்க பைலட்களை பணியமர்த்தல் நடவடிக்கையயிலும் ஈடுபட்டது.
கடன் பிரச்சனை
பெருத்த கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், போதிய நிதி திரட்ட முடியாத காரணத்தினால் தனது சேவையினை தொடர முடியாமல் தவித்தது. இதற்கிடையில் தனது விமான சேவைக்கு பெரும் முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பிறகு கடன் வழங்கியோர் நிறுவனத்தினை ஏலத்தில் விட எஸ்பிஐ தலைமையிலாக குழு நடவடிக்கையில் இறங்கியது.
திவால் மனு
எஸ்பிஐ தலைமையிலான கடன் வழங்குனர்களின் கூட்டமைப்பு நிலுவைத் தொகையை வசூலிக்க ஜுன் 2019ல் திவால் மனு தாக்கல் செய்தது. இதன் மதிப்பு 8000 கோடி ரூபாய் மேல் உள்ளது.
ஜலான் கல்ராக் கூட்டமைப்பு
இதற்கிடையில் தான் கடந்த ஆண்டு ஜலான் கல்ராக் கூட்டமைப்பானது ஜெட் ஏர்வேஸினை ஏலத்தில் எடுத்தது. இதன் பிறகு தான் தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி விண்ணப்பித்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கி வந்த உள்நாட்டு சேவை மற்றும் வெளிநாட்டு சேவைகளையும் மீண்டும் தொடரவும் முயற்சிகள் நடைபெற்று வந்தது.