நிதி பற்றாக்குறையால் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தங்களது விமான சேவையை நிறுத்தி இருந்த ஜெட் ஏர்வேஸ், சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாகச் செய்து பார்த்துள்ளது.
விமானச் சேவையைத் தொடங்கும் முன்பு பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சோதனை ஓட்டத்தை ஜெட் ஏர்வேஸ் நடத்தியுள்ளது.
கடன்
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பெற்ற 25 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் சேவையை நிறுத்தியது.
கொரோனா
பின்னர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் பறக்குமா? என கேள்விகள் எழுந்து வந்தது. பின்னர் நிதி சிக்கல் தீர்ந்த போது கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு, விமான சேவைகள் மொத்தமாகப் பாதிக்கப்பட்டன. இப்போது கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, மீண்டும் சேவையைத் தொடங்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சோதனை வெற்றி
அதன் ஒரு பகுதியாக 3 ஆண்டுகளுக்குப் பிறகு மே 5-ம் தேதி, மீண்டும் விமானச் சேவையைத் தொடங்க, தங்களது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக ஜெட் ஏர்வேஸ் நடத்தி முடித்துள்ளது.
உணர்வுப்பூர்வமான நாள்
"இன்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு 29வது பிறந்தநாள். மீண்டும் ஜெட் ஏர்வேஸ் வானில் பறந்தது. இந்த நாளுக்காகக் காத்திருந்தவர்கள், வேலை செய்துகொண்டு இருந்தவர்கள், பிரார்த்தனை செய்து வந்தவர்கள் மற்றும் ஜெட் ஏர்வேஸ் மீண்டும் பறக்காதா என காத்திருந்த மதிப்பு வாய்ந்த வாடிக்கையாலர்களுக்கும், நமக்கும் இது ஒரு உணர்வுப்பூர்வமான நாள்." என டிவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளது ஜெட் ஏர்வேஸ்.
விமான சேவை எப்போது முதல் கிடைக்கும்?
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முழுமையான விமான சேவை 2022, அக்டோபர் முதல் மீண்டும் தொடங்கப்படும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் கபூர் கூறியுள்ளார். முன்னதாக ஜெட் ஏர்வேஸ் விமான சேவை செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
வேலைவாய்ப்பு
ஜெட் ஏர்வேஸ் விமான சேவை மீண்டும் தொடங்கும் போது உலகம் முழுவதும் ஆயிரம் கணக்கானவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.