சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைவது இல்லை எனப் பல நாட்கள் பலர் புலம்பியதைக் கேட்டு இருப்போம். மத்திய அரசு அதிகளவிலான வருமானத்தைப் பெறுவதற்காக ஜிஎஸ்டி வரி அமைப்புக் கொண்டு வரப்பட்டுப் பல ஆண்டு ஆகியும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி அமைப்பிற்குள் கொண்டு வராமல் கலால் வரி மூலம் அதிகளவிலான வருமானத்தைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், விமானப் போக்குவரத்து உலகம் முழுவதிலும் முடங்கிவிட்ட நிலையில், இதன் தேவை அதிகளவில் குறைந்தது. இதன் எதிரொலியாகச் சர்வதேசச் சந்தையில் விமான எரிபொருளில் விலை சுமார் 23 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால் சாமானியர்கள் அதிகம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலையில் 3ல் ஒரு பங்கு விலை தான் விமான எரிபொருளின் விலை. ATF என அழைக்கப்படும் விமான எரிபொருள் நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விடவும் மாறுபட்டது, அதிக ஹைட்ரோகார்பன் கொண்டது. இதை White Kerosene எனவும் அழைக்கப்படும்.
50 நாட்கள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 20 டாலருக்கும் குறைவான நிலையை அடைந்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் 50 நாட்களாக இதன் விலை மாறுபடாமல் ஓரே விலையில் இருக்கிறது.
கொரோனா பாதித்துள்ள இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல் விலையும் மக்களை அதிகளவில் பாதிக்கிறது என்பதே உண்மை.
விமான எரிபொருள்
பெட்ரோல், டீசல் விலை 50 நாட்களாகக் குறையாமல் இருக்கும் நிலையில் விமான எரிபொருள் விலை 23.3 சதவீதம் அதாவது ஒரு கிலோலிட்டர் விமான எரிபொருள் 6,812.62 ரூபாய் குறைந்து 22,544.75 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் விமான எரிபொருள் விலை ஒரு லீட்டர் 22.54 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சென்னையில் சாதாரணப் பெட்ரோல் விலை 72.28 ரூபாய். இதேபோல் நாட்டின் மொத்த கனரக வாகனங்களும் பயன்படுத்தும் டீசல் விலை 65.71 ரூபாயாக உள்ளது.
தொடர் விலை சரிவு
விமான எரிபொருள் விலை பிப்ரவரி மாதத்தில் இருந்து கிட்டதட்ட 6 முறை குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள 23.3 சதவீத விலை குறைப்புதான் அதிகப்படியானது.
லாக்டவுன் காலத்திற்கு முன்பு விமான எரிபொருள் ஒரு கிலோ லிட்டருக்கு 64,323.76 ரூபாயாக இருந்தது. அதாவது ஒரு லிட்டர் 64.32 ரூபாய்.
பொதுத்துறை நிறுவனங்கள்
அரசு எண்ணெய் நிறுவனங்கள் லாக்டவுன் காலத்திலும் தொடர்ந்து விமான எரிபொருள் விலையை மறு ஆய்வு செய்து சர்வதேசச் சந்தை விலைக்குத் தொடர்ந்து மாற்றி வந்த நிலையில், சாமானியர்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.
50 நாட்களாக விலை மாறாமல் இருப்பது ஒருபக்கம் இருக்க லாக்டவுன் காலத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதன் விளைவாக லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்தது.
ஆடம்பர சேவை
தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் இந்த ஆடம்பர சேவையான விமானப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் விமான எரிபொருள் விலையைத் தொடர்ந்து சர்வதேச விலைக்கு ஈடாகக் குறைந்து வரும் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், சமானியை மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்காமல் இருக்கிறது இந்த அரசு நிறுவனங்கள். இதுதான் புதிய இந்தியாவா..??!!