மும்பை: இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் அனைத்து துறைகளும் மந்த நிலையிலேயே உள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் நகை துறையையும் இந்த மந்த நிலையானது விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம்.
இந்தியாவின் நகை ஏற்றுமதி குறித்த விவரங்களை நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (GJEPC) வெளியிட்டுள்ளது.
இந்த கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 5.49 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 24,583.19 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை, ரத்தினங்கள் இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதுவே கடந்த 2018ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 26,010.87 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, ரத்தினங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர், ஹாங்காங்கில் நிலவி வரும் போராட்டம், மத்திய கிழக்கு நாடுகளில் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டது இது போன்ற பல காரணங்களால் தான் இந்தியாவின் நகை, ரத்தினங்கள் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதே கடந்த ஏப்ரல் - அக்டோபர் மாதங்களிலும் நகை, ரத்தினங்கள் ஏற்றுமதி 5.14 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 1,57,326.03 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த 2018 ஏப்ரல் - அக்டோபரில் 1,65,845.63 கோடி ரூபாயாக ஏற்றுமதியாகியிருந்தது.
இதே போல் நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி ஏப்ரல் - அக்டோபர் மாதத்தில் 17.42 சதவிகிதம் குறைந்து, 85,931.99 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த 2018 ஏப்ரல் - அக்டோபரில் இதன் மதிப்பு ரூ.1,04,062.15 கோடியாக இருந்தது. எனினும், தங்க நகைகள் ஏற்றுமதி 8.50 சதவிகித உயர்வுடன் ரூ.7,577.59 கோடியாக இருக்கிறது.
இதே நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி அக்டோபரில் 18.35 சதவிகிதம் குறைந்து, 13,875.19 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 16,993.89 கோடி ரூபாயாக இருந்தது.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் தங்க நகைகள் ஏற்றுமதி 4.35 சதவிகிதம் உயர்ந்து, 51,002.81 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு 48,877.65 கோடி ரூபாயாக இருந்துள்ளது.