இந்திய டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவை தளத்தை மொத்தமாக மாற்றப்போகும், நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் எனப் பெரிய அளவில் நம்பப்படும் ஸ்பெக்ட்ரம் ஏலம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் வெறும் 71 சதவீத ஸ்பெக்ட்ரம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளது வருத்தம் அளிக்கும் செய்தியாக உள்ளது.
இதேபோல் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்குப் போட்டியாகக் கௌதம் அதானியின் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது, அதானி குழுமம் மிகவும் குறைந்த அளவிலான ஸ்பெக்ட்ரம் மட்டுமே வாங்கியது.
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ சுமார் 88,078 கோடி ரூபாய் தொகைக்கு அலைக்கற்றைக் கைப்பற்றியுள்ளது.
பார்தி ஏர்டெல்
ரிலையன்ஸ் ஜியோ-வை தொடர்ந்து சுனில் மிட்டல்-ன் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.43,084 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை பல்வேறு பேண்டுகளில் கீழ் சுமார் 19,867 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஜியோ மாஸ்
ஏர்டெல் நிறுவனத்தை ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டு மடங்கு அதிகத் தொகையை முதலீடு செய்து அலைக்கற்றைக் கைப்பற்றியுள்ளது. இந்த ஏலத்தில் ஜியோ யாரும் எதிர்பார்க்காத வகையில் 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz மற்றும் 26GHz பிரிவில் அலைக்கற்றைக் கைப்பற்றியுள்ளது.
TRUE 5G சேவை
இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ-வால் TRUE 5G சேவை மட்டும் அல்லாமல் ஆப்டிக் ஃபைபர் வாயிலாகவும் இந்தியாவில் 5ஜி சேவை அளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார் ரிலையன்ஸ் ஜியோ-வின் புதிய தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
2022 ஆகஸ்ட் 15
மேலும் Azadi ka Amrit Mahotsav தினத்தில் அதாவது 75வது சுதந்திர தினம் 2022 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். உலகிலேயே யாரும் இவ்வளவு குறைவான நேரத்தில் 5ஜி சேவையை அறிமுகம் செய்திருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார் ஆகாஷ் அம்பானி.
வோடபோன் ஐடியா, அதானி
மேலும் இந்த ஏலத்தில் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்தில் ரூ. 18,784 கோடி மதிப்புள்ள7 2,668 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ.212 கோடி மதிப்பிலான 26 ஜிகா ஹெர்ட்ஸ் 400 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை மட்டுமே வாங்கியது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மொத்த 72.098 GHz அலைக்கற்றை விற்பனைக்கு வைக்கப்பட்ட நிலையில் நான்கு நிறுவனங்கள் பங்கேற்று 51.236 GHz அலைக்கற்றை மட்டுமே வாங்கினர். இந்த 71 சதவீத அலைக்கற்றை விற்பனை மூலம் மத்திய டெலிகாம் துறை மொத்தம் 1,50,173 கோடி ரூபாய் அளவிலான தொகையைத் திரட்டியது.
71% மட்டுமே விற்பனை
இந்தியாவின் முதல் 5ஜி அலைக்கற்றை ஏலம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும், விற்பனைக்கு வைக்கப்பட்ட மொத்த அலைக்கற்றைகளில் 71% மட்டுமே விற்று, ரூ.1,50,173 கோடியை அரசு திரட்டியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.
20 வருடம், 7.2% வட்டி
ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் விதிமுறைகளின்படி, ஸ்பெக்ட்ரம் கைப்பற்றிய டெலிகாம் நிறுவனங்கள் 20 சமமான வருடாந்திர தவணைகளில் இத்தொகையைச் செலுத்த வேண்டும், ஒரு ஆண்டுக்கு 7.2 சதவீத வட்டியை இத்தொகைக்குக் கணக்கிடப்படுகிறது.