முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து பல தனியார் முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்தும், பல தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்தும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈட்டிய நாள் முதல் ஜியோ 4ஜி சேவை மூலம் வெற்றியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டு 5ஜி சேவையை மக்களுக்கு அளிக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் பணியாற்றி வந்தது.
இந்நிலையில் 5ஜி சேவைக்காகப் பிரத்தியேகமாகக் குவால்கம் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ள ஜியோ செய்த சோதனையில் 5ஜி தொழில்நுட்பத்தின் வாயிலாகக் குவால்கம் 5G RAN தளத்தின் உதவியுடன் சுமார் 1 ஜிபிபிஎஸ் வேகத்தைப் பெற்றுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் முதல் முறையாக 5ஜி சேவையின் சோதனையில் வெற்றி கண்டுள்ளது ஜியோ, இதனால் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் என்ன லாபம்.
5ஜி சேவை
இதுவரை இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை யாரும் செய்யாத நிலையில், ஜியோ தனது 5ஜி சோதனையில் வெற்றி கண்டுள்ளது. இதனால் இந்தியாவில் முதல் முறையாக 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் வாய்ப்புகளும் ஜியோவிற்கு தான் அதிகம்.
இதனால் ஜியோவின் 40 கோடி வாடிக்கையாளர்களும் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
டிஜிட்டல் பொருளாதாரம்
ஜியோ அறிமுகம் செய்ய உள்ள 5ஜி சேவைகள் அனைத்தும் ஜியோ இன்போகாம் சொந்தமாக உருவாக்கிய தொழில்நுட்பத்தின் வாயிலாக அளிக்கப்படும் காரணத்தால் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வெற்றிக்கு முதற்படியாக இது இருக்கும்.
மேலும் கூகிள் ஏற்கனவே இந்தியாவில் டிஜிட்டல் தளத்தை மேம்படுத்துவதற்காகப் பல பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஜியோவின் 5ஜி சேவைகள் நாட்டின் மக்களுக்குப் பெரிய அளவில் உதவும்.
உலக நாடுகள்
5ஜி சேவையை உலகில் அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, சுவிஸ் ஜெர்மனி ஆகிய சில நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யும் பெருமையை அடைகிறது. மேலும் இந்த வெற்றியால் 5ஜி கருவிகள் மற்றும் உபகரணங்கள் சார்ந்த வர்த்தகம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் உருவாகும்.
மத்திய அரசு 5ஜி அலைக்கற்றை 2021ஆம் ஆண்டில் ஏலத்தில் விட உள்ளதால், அதே ஆண்டில் ஜியோவும் தனது தேவையை அறிமுகம் செய்யத் தயாராக உள்ளது.
ஸ்மார்ட்போன்
5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்ய அதேவேளையில், இந்தியாவில் புதிதாக வந்திருக்கும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
இதனால் ஏற்றுமதி வாய்ப்புகள் மட்டும் அல்லாமல் இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளது. இது உண்மையாகும் நிலையில், சீனாவில் இருந்து ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்காது, அதிலும் குறிப்பாக 5ஜி போன்கள் மற்றும் டெலிகாம் உபகரணங்கள்.