இந்திய பொருளாதாரத்தைப் போலவே இந்திய டெலிகாம் சந்தையில் பல மோசமான சிக்கல்களுள் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறது, ஒருபக்கம் வேகமாக வளர்ந்து வரும் டெலிகாம் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை தரத்தில் வரலாறு காணாத உயர்வு மறுபுறம் குறைந்த வருமானம், AGR கட்டண நிலுவை பிரச்சனை, வர்த்தகத்தை முழுமையாக நடத்தக்கூடப் பணம் இல்லாமல் தவிக்கும் டெலிகாம் நிறுவனங்கள் என இரு மாறுபட்ட சூழ்நிலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.
அதிலும் முக்கியமாக ஐடியா-வோடபோன் நிறுவனத்தின் பாடு பெரும்பாடாக உள்ளது. AGR கட்டண நிலுவையை ஐடியா-வோடபோன் நிறுவனம் செலுத்தவில்லையெனில் மூடுவிழா தான் என்பது போன்று சக போட்டி நிறுவனங்கள் இந்நிறுவன வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், சேவை அளிக்கும் தங்களது சேவை தளத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது.
மூடுவிழா
ஐடியா-வோடபோன் நிறுவனம் முடங்கிவிட்டால் இந்நிறுவன வாடிக்கையாளர்களை எப்படித் தங்கள் நெட்வொர்க் உள் இழுப்பது, அதற்கான திட்டம் என்ன..? இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களையும் ஏற்றுக்கும் வண்ணம் நெட்வொர்கை எப்படி மேம்படுத்துவது..? போன்ற முக்கியமான விஷயங்கள் குறித்து ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
30.4 கோடி வாடிக்கையாளர்கள்
ஐடியா-வோடபோன் நிறுவனத்தில் தற்போது 20 கோடி 2ஜி வாடிக்கையாளர்கள் உட்படச் சுமார் 30.4 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஓருவேளை இந்நிறுவனம் AGR கட்டணத்தைச் செலுத்தத் தவறினால் நிறுவனத்தை மூட வேண்டிய சூழ்நிலை வரும். அப்போது 30.4 கோடி வாடிக்கையாளர்களும் ஜியோ அல்லது ஏர்டெல் நிறுவனத்தை நோக்கித் தான் வருவார்கள்.
ஜியோ மற்றும் ஏர்டெல்
ஜியோ நிறுவனத்தில் 37.0 கோடி 4ஜி கஸ்டமர்களும், ஏர்டெல் நிறுவனத்தில் 2ஜி மற்றும் 4ஜி வாடிக்கையாளர்களைச் சேர்த்து மொத்தம் 28.3 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் ஐடியா-வோடபோன் நிறுவனத்தின் 30.4 கோடி வாடிக்கையாளர்கள் இரு நிறுவனங்களும் ஜாக்பாட் தான்.
இதிலும் முக்கியமாக ஐடியா-வோடபோன் நிறுவனத்தின் 10.4 கோடி 4ஜி வாடிக்கையாளர்கள் தான் மற்ற இரு போட்டி நிறுவனங்களுக்கு இலக்காக உள்ளது.
2ஜி மற்றும் 3ஜி பிரச்சனை
ஐடியா-வோடபோன் நிறுவனத்தில் 20 கோடி வாடிக்கையாளர்கள் 2ஜி மற்றும் 3ஜி சேவை பிரிவில் இருப்பதால் அவர்கள் ஜியோ நிறுவனத்தில் இணைய வாய்ப்பு இல்லை. இவர்கள் அனைவரும் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தான் செல்ல வேண்டும்.
ஐடியா-வோடபோன் நிறுவனம் மூடப்பட்டால் அதிகம் லாபம் அடையப் போவது ஏர்டெல் தான், 2ஜி, 3ஜி 4ஜி என அனைத்து சேவை பிரிவிலும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
60 நாள்
ஒரு டெலிகாம் நிறுவனம் மூடப்படுகிறது என்றால் 30 நாட்களுக்கு முன்பாக டெலிகாம் கட்டமைப்பு நிறுவனமான டிராய்-யிடம் அறிவிக்க வேண்டும், அதுமட்டும் அல்லாமல் 60 நாட்களுக்கு மொபைல் போர்ட்டபிலிட்டி செய்ய வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.
இப்படித் தான் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சில வருடங்களுக்கு முன் செய்தது.