நீண்ட காலமாக இந்திய டெலிகாம் நிறுவனங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 5ஜி சேவைக்கான சோதனை அனுமதி மத்திய டெலிகாம் துறை அளித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் சேவை அளித்து வரும் டெலிகாம் நிறுவனங்கள் மிகப்பெரிய முதலீட்டில் கைப்பற்ற உள்ள அலைக்கற்றை மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தைச் சோதனை செய்து பார்க்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது மத்திய டெலிகாம் துறையிடம் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோஇன்போகாம், வோடபோன், எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையைச் சோதனை செய்து பார்க்க அனுமதி பெற்றுள்ளது.
கொரோனா 2வது அலை
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கும் நிலையில் பல துறைகள் வர்த்தகம் மற்றும் உற்பத்தி செய்ய முடியாம் முடங்கியிருக்கும் நிலையில், இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் டெலிகாம் துறை தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முக்கியமான வாய்ப்பை பெற்றுள்ளது.
5ஜி சேவை
இந்த அனுமதி மூலம் 5ஜி சேவையைப் பார்தி ஏர்டெல், வோடபோன், எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் டெலிகாம் உபகரணங்கள் மற்றும் டெலிகாம் தொழில்நுட்பம் தயாரிக்கும் எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் C-DOT ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சோதனை செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோஇன்போகாம்
ஆனால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோஇன்போகாம் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப் பல மாதங்களுக்கு முன்னதாகவே இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய வேண்டும் எனத் திட்டத்துடன் தனக்கெனத் தனித் தொழில்நுட்பத்தைத் தயாரித்து வைத்துள்ளது. இதன் வாயிலாகவே தற்போது ஜியோ தனது 5ஜி சேவையைச் சோதனை செய்ய உள்ளது.
இந்திய டெலிகாம் துறை
தற்போது இந்திய டெலிகாம் துறை வழங்கியுள்ள அனுமதியின் படி அடுத்த 6 மாதத்தில் அதாவது தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக 2 மாத காலத்தையும் சேர்ந்து டெலிலாம் நிறுவனங்களின் விருப்பத்தின் பெயரில் தொழில்நுட்ப கூட்டாளிகளைத் தேர்வு செய்து 5ஜி சேவையைச் சோதனை செய்ய வேண்டும்.
5Gi தொழில்நுட்ப
இதேவேளையில் சென்னை ஐஐடி கல்லூரி மற்றும் CEWiT இணைந்து உருவாக்கிய 5Gi தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த டெலிகாம் ஊக்கப்படுத்தி வருகிறது. இந்தியாவில் உருவாக்கப்பட்டு உள்ள 5Gi தொழில்நுட்பத்தைச் சர்வதேச டெலிகம்யூனிகேஷன்ஸ் யூனியனும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ - பார்தி ஏர்டெல்
இந்திய டெலிகாம் சந்தையில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தியது மூலம் பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கும், ஜியோவை வீழ்த்த போராடிக்கொண்டு இருக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கும் இந்த 5ஜி மிகமுக்கியமானதாக விளங்குகிறது.