அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாகிவிட்டது.. ஜியோ ஆதிக்கத்தால் மக்கள் படும் அவதி..!

இந்திய மக்களைக் கடந்த 4 நாட்களில் அதிகம் புலம்பவிட்ட விஷயம் என்றால் டெலிகாம் கட்டண உயர்வு தான், அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு மாறியவர்கள் கண்ணீரைத் தாரை தாரையாக "ஊற்றுகின்றனர்". ஓரே நேரத்தில் சொல்லி வைத்தது போல் 3 தனியார் டெலிகாம் சேவை நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது. இப்போது தான் பலருக்கும் அரசு நிறுவனமான BSNL நினைவுக்கு வருகிறது.

இந்தியாவில் 95 சதவீத வையர்லெஸ் டெலிகாம் வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் தனியார் டெலிகாம் சேவை நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது டெலிகாம் சேவை கட்டணத்தை 10 முதல் 27 சதவீதம் வரை உயர்த்துள்ளன. இதன் மூலம், 5ஜி சேவை, 4ஜி சேவை வாடிக்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாகிவிட்டது.. ஜியோ ஆதிக்கத்தால் மக்கள் படும் அவதி..!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா கட்டண உயர்வு: கடந்த இரண்டு நாட்களில் செய்யப்பட்ட இந்த கட்டண உயர்வு மூலம் 3 டெலிகாம் சேவை நிறுவனங்களும் ஆண்டுக்கு சுமார் ரூ.47,500 கோடி வரை வருமானத்தைப் பெற முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு சுற்றில் பார்தி ஏர்டெல் 10-21 சதவீதமும், ரிலையன்ஸ் ஜியோ 13-27 சதவீதம் வரையிலும், வோடபோன் ஐடியா 10 - 23 வரையிலும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு தேவை என்றும், டெலிகாம் நிறுவனங்களின் ARPU 300 ரூபாயாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று கூடி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து ஏர்டெல் தான், ஆனால் முதன் முதலாகக் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ.

ஜியோ-வின் மறைமுக ஆதிக்கம்: ஏர்டெல் கோரிக்கை வைத்தாலும், அதன் நிதி நிலையை மேம்படுத்தக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் இருந்தாலும் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்த முடியாத நிலைக்கு மாட்டிக்கொண்டு உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஜியோவின் ஆதிக்கம்.

ரிலையன்ஸ் ஜியோ இந்திய டெலிகாம் சந்தையில் 2016ல் அறிமுகமாகி வெறும் 8 வருடத்தில் பெரும் ஆதிக்கத்தை அடைந்துள்ளது, இதேவேளையில் 1995 ஆம் ஆண்டில் அறிமுகமான ஏர்டெல், ஜியோவின் அறிவிப்புக்காகக் காத்திருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இதிலிருந்தே முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ-வின் ஆதிக்கம் எந்த அளவுக்கு உள்ளது எனத் தெரிந்திருக்கும்.

அம்பானி குடும்பம்: இந்திய டெலிகாம் துறைக்கும், அம்பானி குடும்பத்திற்கும் நீண்ட கால தொடர்பு உள்ளது 500 ரூபாய்க்கு மொபைல் விற்பனை மூலம் இந்தி டெலிகாம் சந்தையில் பெரும் புரட்சியை செய்த பெருமை உண்டு. ஆனால் திருபாய் அம்பானி மறைவிற்கு பின்பு ரிலையன்ஸ் கம்யூனிகேஷனஸ் வர்த்தகம் அனில் அம்பானி கைக்கு சென்றது. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யும் வரையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனஸ் தடுமாறித் தடுமாறி இயங்கி வந்தது.

இந்திய டெலிகாம் துறை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்கு முன்பு இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல், வீடியோகான், சிங்டெல், எம்டிஎஸ், ஏர்செல், டெலிநார், டாடா டோகோமோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என மொத்தம் 11 நிறுவனங்கள் இருந்தது. இதனால் கட்டணத்தை உயர்த்துவதில் பெரும் போட்டித்தன்மை இருந்தது, கட்டணத்தை உயர்த்துவதால் வாடிக்கையாளர்களை இழக்கக் கூடும் என்ற அச்சம் இருந்தது.

மக்கள் கூட்டம்: ஆனால் ரிலையன்ஸ் ஜியோ இலவச டேட்டா, அதிவேக 4ஜி சேவை என கவர்ச்சிகரமான அறிவிப்புகள் உடன் 2016ல் அறிமுகமானது. சிம்கார்டுகளை கூவி கவி விற்க டெலிகாம் நிறுவனங்கள் முயற்சி செய்து வந்த காலத்தில் ஜியோவின் இலவசத்தால், மக்கள் காலையில் கடை திறக்கும் முன்பே வரிசைகட்டி நின்று ஜியோ சிம் கார்டுகளை வாங்கிய நிலை உருவானது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதிகப்படியான இலவசங்களை அறிவித்து பிற நிறுவனங்களின் வர்த்தகத்தை, திட்டமிட்டே தாக்குகிறது என ஏர்டெல் உட்பட பல நிறுவனங்கள் TRAI அமைப்பிடம் புகார் அளித்தும் தடுக்க முடியவில்லை. இந்க விலை போட்டியை சமாளிக்க முடியாமல் 11 டெலிகாம் நிறுவனங்கள் வெறும் 4 டெலிகாம் நிறுவனங்களாக மாறியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வளர்ச்சி: இதில் மூடப்பட்ட நிறுவனங்களின் பெரும் பகுதி வாடிக்கையாளர்கள் அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக ஜியோவுக்கு சென்றனர், இப்படி இலவசத்தால் ஆதிக்கத்தை அடைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ கிட்டத்தட்ட ஒரு மோனோபோலியாக உருவெடுத்துள்ளது. பொதுவாக மோனோபோலி என்றால் ஒரு நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது தான் ஆனால் இங்கு ஜியோ அதிகப்படியான வாடிக்கையாளர்களை வைத்துள்ள காரணத்தால் பிற நிறுவனங்கள் சிறிய தவறு அல்லது வாய்ப்பை கொடுத்தும் ஜியோ ஸ்கோர் செய்துவிடும் நிலையில் உள்ளது.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை: இதனால் ஒட்டுமொத்த டெலிகாம் துறைக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஏஜமானாக உள்ளது. ஜியோ எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை நீங்களே பாருங்க, ஏப்ரல் 2024 முடிவில் நாட்டின் மொத்த Internet service providers (ISPs) பட்டியலில் ஜியோ சுமார் 472.42 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது. ஏர்டெல் 267.57 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது. Vi 126.43 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது. BSNL 20.84 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது. Internet service providers என்பது வையர்டு மற்றும் வையர்லெஸ் என இரண்டுமே அடங்கும்.

20 கோடி வாடிக்கையாளர்கள் வித்தியாசம்: முதல் இடத்தில் இருக்கும் ஜியோவுக்கும், 2வது இடத்தில் இருக்கும் ஏர்டெல்-க்கும் சுமார் 200 மில்லியன் அதாவது 20 கோடி வாடிக்கையாளர்கள் வித்தியாசம் உள்ளது. இப்படியிருக்கையில் ஏர்டெல் தேவையில்லாமல் கட்டணத்தை உயர்த்தினால் அதன் வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஜியோவுக்கு தாவிவிடுவார்கள் என்ற அச்சத்தால் மட்டுமே ஏர்டெல் ஜியோ கட்டண உயர்வு அறிவிப்பு வரும் வரையில் காத்திருந்து விலையை உயர்த்தியுள்ளது.

கெத்து காட்டும் ஜியோ: இந்த ஆதிக்கத்தை பயன்படுத்தி வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது போல் ஜியோ தனது கட்டணத்தை தடாலடியாக 13-27 சதவீதம் வரையில் உயர்த்தி பெரும் லாபத்தை பார்த்து வருகிறது. கடைசியில் மக்களுக்கு தான் பெரும் பாதிப்பாக உள்ளது, மக்கள் நலனை காக்க டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையம் சேவை தரம், இண்டர்நெட் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் முறையை கொண்டு வர வேண்டும்.

பிஎஸ்என்எல்: இப்போ BSNL-ஐ மிஸ் செய்கிறவர்கள் கமெண்ட் பண்ணுங்க. BSNL நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியா முழுவதும் 4ஜி சேவை அறிமுகம் செய்யும் பணிகளை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+