இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி இந்த லாக்டவுன் காலத்தில் பல்வேறு முதலீடுகளைப் பெற்றதன் மூலம் தனது நிறுவனத்தின் மதிப்பு மற்றும் சொத்து மதிப்பு மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவையைப் பிரிவின் பங்குகளை விற்பனை செய்து பெரும் தொகையை முதலீடாகப் பெற்று அடுத்தகட்ட வளர்ச்சி திட்டத்தில் முதலீடு செய்யக் காத்துக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் டெலிகாம் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியைக் கட்டமைப்பதற்காக அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவின் டிஜிட்டல் உலகை அமைக்கத் திட்டம் தீட்டி வருகிறார் முகேஷ் அம்பானி.
இந்த மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக டெலிகாம் வர்த்தகப் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டிய ரிலையன்ஸ் ஜியோ, அடுத்தகட்டமாகத் தனது டெலிகாம் இன்பரா பிரிவில் இருக்கும் பைபர் ஆப்டிக் கேபிள் வர்த்தகத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்க சவுதி மற்றும் அபுதாபி நாட்டின் அரசு முதலீட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
1 பில்லியன் டாலர்
ரிலையன்ஸ் ஜியோவின் டெலிகாம் இன்பரா நிறுவனமான Jio Digital Fibre நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளைச் சவுதி அரேபியா மற்றும் அபுதாபி நாட்டின் அரசு முதலீட்டு நிறுவனங்களான பொது முதலீடு நிதி (PIF) மற்றும் அபுதாபி முதலீட்டு அமைப்பிடம் விற்பனை செய்ய நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ரிலையன்ஸ்.
இந்த 51 சதவீத பங்குகளைப் பொது முதலீடு நிதி (PIF) மற்றும் அபுதாபி முதலீட்டு அமைப்பு தலா 500 மில்லியன் டாலர் அதாவது 3700 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பங்கு விபரம்
Jio Digital Fibre நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை டவர் இன்பராஸ்டக்சர் டிரஸ்ட் நிறுவனம் வைத்துள்ள நிலையில், மீதமுள்ள 49 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் பல்வேறு அமைப்புகள் வைத்துள்ளது.
டவர் இன்பராஸ்டக்சர் டிரஸ்ட் வைத்துள்ள 51 சதவீத பங்குகளைத் தான் தற்போது சவுதி மற்றும் அபுதாபி முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
39,700 கோடி ரூபாய்
InvIT - Jio Digital Fibre நிறுவனம் தனது சேவை விரிவாக்கத்திற்காகச் சுமார் 39,700 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடாகத் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் 14,700 கோடி ரூபாய் தொகையை InvIT - Jio Digital Fibre நிறுவன தனியார் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கு 100 ரூபாய் வீதம் 1.47 பில்லியன் பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
இந்தப் பங்குகளைத் தான் தற்போது சவுதி மற்றும் அபுதாபி முதலீட்டு நிறுவனங்கள் கைப்பற்ற உள்ளது. மீதமுள்ள பங்குகளைத் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கும், தனிநபர் முதலீட்டாளர்களுக்கும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
25,000 கோடி ரூபாய் கடன்
39,700 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தில் 14,700 கோடி ரூபாய் தொகையைப் பங்கு விற்பனை மூலம் திட்டப்படும் நிலையில், மீதமுள்ள 25,000 கோடி ரூபாய் தொகையைத் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடன் பெற உள்ளது.
87,296.3 கோடி ரூபாய் கடன்
InvIT - Jio Digital Fibre நிறுவனம் தற்போது திரட்டப்போகும் 39,700 கோடி ரூபாயும் இந்நிறுவனத்தின் கடன் மற்றும் நிலுவைத் தொகையைச் செலுத்தப் பயன்படுத்தப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் முன்னாள் கூட்டணி நிறுவனம் தான் இந்த InvIT - Jio Digital Fibre நிறுவனம், இந்நிறுவனத்தின் பெயரில் தற்போது கடன் மற்றும் நிலுவைத் தொகையாகச் சுமார் 87,296.3 கோடி ரூபாய் உள்ளதாகச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி தரவுகள் கூறுகிறது.
ஜியோ இன்போகாம்
2019 ஏப்ரல் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தனது பைபர் மற்றும் டவர் வர்த்தகத்தை டவர் இன்பராஸ்டக்சர் டிரஸ்ட் உடன் இணைந்து 2 பிரிவுகளாகப் பிரித்தது. Jio Digital Fibre Pvt Ltd (JDFPL) மற்றும் Reliance Jio Infratel Pvt Ltd (RJIPL) ஆகத் தனித்தனி வர்த்தகப் பிரிவாகப் பிரித்தது.
இவ்விரண்டு நிறுவனத்திலும் டவர் இன்பராஸ்டக்சர் டிரஸ்ட் தலா 51 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 49 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் துணை நிறுவனமான Reliance Industrial Investments and Holdings Ltd (RIIHL) வைத்துள்ளது.
ஜியோ டிஜிட்டல் பைபர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டவர் இன்பராஸ்டக்சர் டிரஸ்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய InvIT - Jio Digital Fibre நிறுவனம், தற்போது இந்தியாவில் சுமார் 7 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலான பைபர் நெட்வொர்கை நிர்வாகம் செய்து வரும் நிலையில், இப்புதிய முதலீடுகள் மூலம் பைபர் நெட்வொர்க்-ஐ 11 லட்சம் கிலோமீட்டர் வரையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஜியோ டிஜிட்டல் பைபர் நிறுவனம்.
டெலிகாம் சேவையின் எதிர்காலம்
ஜியோவின் இந்தப் பைபர் நெட்வொர்க் வர்த்தகம் தான் ஜியோவின் எதிர்காலத்தைக் கட்டமைக்கப்போகும் அடித்தளம். ஜியோ டிஜிட்டல் பைபர் நிறுவனத்தின் மூலம் நாடு முழுவதும் அதிவேக இண்டர்நெட் சேவையை எவ்விதமான தடையுமின்றிக் கொடுப்பது மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை மிகக் குறைந்த விலையில் கொடுப்பதற்கு இந்தப் பைபர் நெட்வொர்க் அடிப்படையாக இருக்கும்.