முகேஷ் அம்பானி தனது டெலிகாம் சேவை பிரிவான ரிலையன்ஸ் ஜியோ-வை அறிமுகம் செய்த நாளில் இருந்து தொடர்ந்து அதிரடி திட்டங்களை அறிவித்துப் பல கோடி வாடிக்கையாளர்களைச் சேர்த்த பின்பு, கடந்த ஒரு வருடமாக டெலிகாம் சேவையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார்.
மொபைல் சேவை கட்டணத்திலும், பைபர் ஆப்டிக் பிராட்பேண்ட் சேவையிலும் புரட்சி செய்த ரிலையன்ஸ் ஜியோ தற்போது போஸ்ட்பெய்டு பிரிவிலும் அதிரடி திட்டங்களை அறிவித்துச் சக போட்டி நிறுவனங்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
ஜியோவின் இப்புதிய போஸ்ட்பெய்டு திட்டங்கள் அறிவிப்பால் மீண்டும் டெலிகாம் சந்தையில் விலை போர் வெடித்துள்ளது.
ஜியோ போஸ்ட்பெய்டு
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல இணைப்புச் சேவைகளுடன் தனது புதிதாக ஜியோ போஸ்ட்பெய்டு பிளஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மலிவான கட்டணம்
மாதம் 75 ஜிபி இண்டர்நெட் டேட்டா முதல் 300 ஜிபி டேட்டா வரையிலான திட்டத்தை 399 ரூபாய் முதல் 1499 ரூபாய் வரையில் சுமார் 5 திட்டங்களை அறிவித்துள்ளது ஜியோ, இதில் கூடுதலாக ஒருமாதம் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்குப் பயன்படுத்தும் வகையில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு இன்றைய இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார் போன்ற OTT தளத்தின் இணைப்பையும் இந்தப் போஸ்ட்பெய்டு திட்டத்தில் கொடுக்கிறது ஜியோ.
ஆகாஷ் அம்பானி
இப்புதிய போஸ்ட்பெய்டு பிளஸ் திட்டத்தை அறிமுகம் அடுத்து, ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், இத்திட்டம் ஒவ்வொரு இந்திய மக்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும், உயர் தர டெலிகாம் சேவை மட்டுமல்லாமல், அளவில்லா பொழுதுபோக்கு தளத்தையும் எங்களது புதிய போஸ்ட்பெய்டு பிளஸ் திட்டத்தின் மூலம் கொடுக்க முயற்சி செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
போட்டி
ஜியோவின் இந்தப் புதிய போஸ்ட்பெய்டு பிளஸ் திட்டத்தில் OTT தளச் சேவைகளும் இருக்கும் காரணத்தால் பெரியவர்கள் மட்டும் அல்லாமல் இளைஞர்களையும் இத்திட்டம் பெரிய அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் குறுகிய காலத்திலேயே ஜியோ நிறுவனத்தில் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஜியோ நிறுவனத்தின் ARPU அளவீடு வேகமாக உயர வாய்ப்புள்ளது.
ஏர்டெல், வோடபோன் ஐடியா
சமீபத்தில் ஏர்டெல் தனது டெலிகாம் சேவை கட்டணத்தை உயர்த்திய நிலையில் அதன் வாடிக்கையாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் ஜியோவின் இந்தப் புதிய போஸ்ட்பெய்டு திட்டம் அறிமுகத்தால் ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் ஜியோவிற்கு மாற நேரிடம். இதை ஏர்டெல் எப்படிக் கையாளப் போகிறது..?
AGR நிலுவை கட்டண பிரச்சனையில் வெளி வந்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனம் ஜியோவுடன் போட்டி போடும் அளவிற்குப் புதிய திட்டத்தை அறிவிக்குமா..?!! என்பது சந்தேகம் தான்.