இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சந்தை ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், அதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கப்போவது எத்தனை பேருக்கு தெரியும்.
ஆம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவையான ஜியோ வெற்றி அடைந்த நிலையில், டிஜிட்டல் சேவைக்குள் நுழைய வேண்டும் எனத் திட்டமிட்டு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே கூகிள் பே, பேடிஎம் போன்று UPI செயலியை உருவாக்கும் பணியில் ஜியோ இறங்கியது.
தற்போது இந்த UPI செயலி அறிமுகம் செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஜியோ பே
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய பேமெண்ட் செயலியின் பெயர் ஜியோ பே. கிட்டத்தட்ட 1 வருட சோதனைகளுக்குப் பின் தற்போது ஆக்ஸ்ட் 15ஆம் தேதி சில 1000 ஜியோ போன்களுக்கு மட்டும் முதற்கட்ட சோதனைக்காக ஜியோ பே சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சேவைகள்
இந்த ஜியோ பே செயலியின் மூலம் Tap and Pay, யூபிஐ மூலம் பணம் அனுப்புதல், ஜியோ ரீசார்ஜ் போன்ற சேவைகள் உள்ளதாகவும். அதுமட்டும் அல்லாமல் பல வங்கிக் கணக்குகளை ஓரே செயலியில் சேர்க்கும் அம்சமும் இந்த ஜியோ பே செயலியில் இருப்பதாக BGR இந்தியா தெரிவித்துள்ளது.
38 கோடி வாடிக்கையாளர்கள்
சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ பே பேமெண்ட் சேவையைத் தனது ஜியோ டெலிகாம் சேவை தளத்தில் இருக்கும் 38 கோடி வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் ஆஃப் இந்தியா (NPCI) அமைப்புடன் இணைந்து பணியாற்ற துவங்கியது குறிப்பிடத்தக்கது.
வங்கி இணைப்பு
மக்களுக்கு முழுமையான சேவைகளை அளிக்க வேண்டும் என்பதற்காக ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ பே செயலியில் சேவை இணைப்பிற்காக ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, Standard Chartered, IndusInd, எஸ்பிஐ வங்கி, கோட்டாக் வங்கி, யெஸ் வங்கி, ஆர்பிஎல் வங்கி ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.
மேலும் ஜியோ செயலியில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இணைப்பின் மூலமும் பேமெண்ட் செய்யும் வசதிகளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
போட்டி
ஜியோவின் வெற்றியே ஆரம்பமே அதிரடி என்பது தான். தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ பே சேவையை அறிமுகம் செய்தால் முதல் நாளிலேயே சுமார் 38 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இருக்கும். இது வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாதது என்பதால் இந்திய பேமெண்ட் சேவையில் இருக்கும் சிறு நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை ஜியோ பே அறிமுகத்தால் எதிர்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.
அனைத்தையும் தாண்டி இந்திய மக்கள் மத்தியில் பணப் பரிமாற்றம் செய்யும் போது நம்பிக்கையான செயலியின் மூலம் தான் பரிமாற்றம் செய்வார்கள். இந்த வகையில் ஜியோ பே மக்களின் நம்பிக்கை பெறுமா..?