இந்திய டெலிகாம் சந்தையில் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் முகேஷ் அம்பானியின் டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 2021ல் டெலிகாம் சேவை துறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் 5ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டம் தீட்டியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகத்தின் மூலம் இந்திய டெலிகாம் சந்தையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான சந்தை வர்த்தகத்தைக் கைப்பற்றி ஆதிக்கம் செய்தும் இந்தத் தறுவாயில் ஜியோவின் 5ஜி சேவை திட்டம் சக போட்டி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
முகேஷ் அம்பானி 2021 பிளான்
இந்தியா மொபைல் காங்கிரஸ் 2020 மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, ஜியோ 2021ஆம் ஆண்டின் 2வது பாதியில் 5ஜி சேவையை அறிமுகம் செய்து இந்திய டெலிகாம் துறையில் முன்னோடியாக இருக்கப்போகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டும் இல்லாமல் இந்தியாவின் 5ஜி சேவையில் ஜியோ முன்னோடியாக இருக்கும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்
மலிவான விலையில் 5ஜி சேவை
இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து மக்களுக்கும் பயன்படுத்தும் வகையில் மலிவான விலையில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய அனைத்து விதமான பணிகளையும் ரிலையன்ஸ் ஜியோ மேற்கொண்டு வருவதாகவும், திட்டமிடப்பட்ட 2021 ஆண்டின் 2வது பாதிக்கும் முன்பாகவே 5ஜி சேவையை அறிமுகம் செய்ய முயற்சி செய்து வருவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் சந்தைக்கான வர்த்தகம்
இந்தியாவில் 4ஜி அதிவேக இண்டர்நெட் சேவை அறிமுகம் இந்தியாவில் டிஜிட்டல் கட்டமைப்புக்கான தளத்தை உருவாக்கியுள்ளது. 2020 முழுக்க வேலை, கல்வி, ஷாப்பிங், மருத்துவச் சேவை, மக்களுடன் கலந்துரையாடல், விளையாட்டு என அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே மக்கள் செய்து வருகின்றனர்.
இதன் மூலம் டிஜிட்டல் சேவைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய சந்தை உருவாகியுள்ளது என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்
இந்திய பொருளாதார வளர்ச்சி
மேலும் இந்திய பொருளாதாரம் கொரோனா பாதிப்பால் சரிந்து இருந்தாலும் மீண்டு வருவது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். இதோடு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கான 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா விரைவில் உருவாக்கும் எனவும் முகேஷ் அம்பானி இக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
10 ஆண்டுகள் கணிப்பு
இந்திய வரலாற்றில் மிகவும் அடுத்த 10 ஆண்டுகள் மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகிறது. இந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது, கொரோனாவாலும் தடுக்க முடியாது. அடுத்த 10 ஆண்டுகள் இந்தியா வரலாற்றில் மற்ற முடியாத வளர்ச்சியை அடைய உள்ளது என முகேஷ் அம்பானி இந்தியா மொபைல் காங்கிரஸ் 2020 மாநாட்டில் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.