ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தில் சமீப வாரங்களாக முதலீடாக குவிந்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச நிறுவனமான TPG 4,546.80 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களில் ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக், விஸ்டா ஈக்விட்டி உள்ளிட்ட உலக அளவிலான மிகப் பெரும் நிறுவனங்கள் பெருமளவுக்கு முதலீடு செய்து வருகின்றன.
இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் கடந்த ஏழு வாரங்களில் 9 நிறுவனங்களிலிருந்து ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அளவு முதலீட்டினை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கணிசமான வளர்ச்சி
இந்திய முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம், குறிப்பிட்ட கால அளவில் கணிசமான வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இந்தியாவில் தற்போது மிகப் பெரும் தொலைதொடர்பு நிறுவனமாக வலம் வரும் ஜியோ, தற்போது உலக அளவில் பல்வேறு முதலீடுகளை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் எண்ணெய், சில்லறை வர்த்தகம், தொலைத் தொடர்பு துறை என பல கோணங்களில் தனி காட்டு ராஜவாக வலம் வருகிறது.
எவ்வளவு முதலீடு
ஜியோ நிறுவனம் அதன் 21.99 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 1,02,432.15 கோடி ரூபாயை உலக நாடுகளின் நிறுவனங்கள் மூலம் முதலீடாக பெற்றுள்ளது. உலகளவில் பல நாடுகளும் கொரோனாவால் ஆட்டம் கண்டுள்ள நிலையில், சர்வதேச அளவிலான கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும், இத்தனைப் பெரிய முதலீட்டைப் பெற்றுள்ளது. இந்த மிகப்பெரிய முதலீடானது இந்தியாவின் மிகப்பெரும் டிஜிட்டல் திறனுக்கும், ஜியோவின் தொழில்நுடபத்திறனுக்கு, நீண்டகால வளர்ச்சித் திறனுக்கு, தொழில் யுக்திக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் புரிந்துகொள்ளவேண்டும்.
யார் யார் முதலீடு
கடந்த மாதம் ஏப்ரல் 22-ம் தேதி 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்ததன் மூலம், ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 சதவீதப் பங்குகளை வாங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜென்ரல் அட்லாண்டிக், சில்வர் லேக், விஸ்டா நிறுவனம், கே.கே.ஆர், முபாதாலா முதலீட்டு நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்துள்ளனர்.
மிக்க மகிழ்ச்சி
இதே டிபிஜி நிறுவனத்தின் முதலீடு குறித்து தெரிவித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, டிஜிட்டல் சூழலை உருவாக்குவதன் மூலம், இந்தியர்களின் வாழ்வை டிஜிட்டல் வசதிகள் கிடைக்க வழிவகை செய்யும் தொடர் முயற்சியில் டி.பி.ஜி நிறுவனத்தை நான் வரவேற்கிறேன். உலக தொழில்நுட்ப தொழில்களில் டி.பி.ஜி நிறுவனம் முதலீடு செய்துள்ள தரவுகளைப் பார்த்து நாங்கள் மிகவும் வியப்படைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.