இந்தியாவில் அடுத்தப் பெரிய விஷயமாகப் பார்க்கப்படும் 5ஜி சேவை அறிமுகம் செய்வதில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், மத்திய டெலிகாம் துறையும் 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் அதிக டெலிகாம் வாடிக்கையாளர்களைக் கொண்ட ரிலையன்ஸ் ஜியோ சக போட்டி நிறுவனமான ஏர்டெல்-க்கு சவால் விடும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேலையைச் சுமார் 1000 நகரங்களுக்கு அளிக்கும் வகையில் நெட்வொர்க் கவரேஜ்-ஐ உருவாக்க தயாராக உள்ளதாகவும், 5ஜி சேவையைச் சோதனை செய்வதற்காகப் பைபர் கட்டமைப்பையும் மேம்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
5ஜி சேவை
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை மூலம் இந்திய டெலிகாம் சந்தையில் செய்த மேஜிக்-ஐ 5ஜி சேவையிலும் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஒருபக்கம் 2ஜி வாடிக்கையாளர்களை 4ஜி சேவை பிரிவுக்கு மாற்றும் திட்டத்தில் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில் தற்போது 5ஜி சேவையை ஆரம்பமே 1000 நகரங்களில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கியுள்ளது.
ஏர்டெல் - ஜியோ
இது ஜியோவின் சக போட்டி நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்குச் சவாலான காரியமாக இருந்தாலும், 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவதற்குள் பார்தி ஏர்டெல் நிறுவனமும் ஜியோவுக்கு இணையாகத் தனது கட்டமைப்பை மேம்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி பைபர் நெட்வொர்க்
தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது 5ஜி பைபர் நெட்வொர்க் மூலம் ஹெல்த்கேர், தொழிற்துறை ஆட்டோமேஷன் போன்ற முக்கியமான திட்டத்தைச் சோதனை செய்து வருகிறது என்றும், 3டி மேப்ஸ் மற்றும் ரே டிரேசிங் டெக்னாலஜி ஆகியவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தலைவர் கிரண் தாமஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
3,795 கோடி ரூபாய் லாபம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ 8.9 சதவீத லாப உயர்வைப் பதிவு செய்து சுமார் 3,795 கோடி ரூபாயும், வருவாய் 13.8 சதவீத உயர்வில் 24,716 கோடி ரூபாயும் பெற்றுள்ளது.
1.02 கோடி வாடிக்கையாளர்கள்
டிசம்பர் காலாண்டில் 1.02 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று ஜியோ-வின் ARPU 151.6 ரூபாயாக அதிகரித்துள்ளது என்று அறிவித்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் டேட்டா டிராபிக் வர்த்தகம் டிசம்பர் காலாண்டில் 47.8 சதவீதம் உயர்ந்துள்ளது, இது 5ஜி சேவை அறிமுகத்திற்குப் பின்பு புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கிறது.