2022 ஆம் ஆண்டின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதில் முகேஷ் அம்பானி பேசியபோது பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
குறிப்பாக 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்றும், ஜியோ 5ஜி போன் அறிமுகம் எப்போது என்றும், ஜியோ நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட பல அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி கூறிய முக்கிய தகவல்கள் சிலவற்றை தற்போது பார்ப்போம்.
5ஜி ஜியோ நெட்வொர்க்
எங்களுடைய 5ஜி ஜியோ நெட்வொர்க் உலகின் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட நெட்வொர்க் ஆக உள்ளது என்று கூறிய முகேஷ் அம்பானி 11 லட்சம் கிலோ மீட்டர் அளவிற்கு எங்கள் நெட்வொர்க் விரிவடைந்து உள்ளதாக கூறியுள்ளார்.
ஜியோ பைபர் நெட்வொர்க்
ஜியோ பைபர் நெட்வொர்க் இந்தியாவில் நம்பர் ஒன் நிறுவனமாக உள்ளது என்றும் கோவிட் ஊரடங்கு நேரத்தில் கூட ஜியோ நிறுவனம் சிறப்பாக செயல்பட்டது என்றும் தெரிவித்தார்.
உலகை 27 முறை சுற்றி வரலாம்
ஜியோ பைபர் ஆப்டிக் நெட்வொர்க் 11 லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்டது என்றும் இது பூமியை 27 முறை சுற்றிவர போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்தர சேவை
மேலும் ஜியோவின் உயர்தர சேவை மற்றும் சலுகை விலையில் பைபர் ஆப்டிக் நெட்வொர்க் இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு வரப்படும் என்றும், ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முதுகெலும்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு புகழாரம்
நமது பாரத பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, ஆதார், ஜன்தன், யுபிஐ, ஆயுஷ்மான் பாரத், ஸ்டார்ட்அப் இந்தியா போன்ற பல உலகத் தரம் வாய்ந்த தேசிய தளங்களில் முன்னேற்றத்தை இந்தியா கண்டுள்ளது என்றும் அவர் பிரதமருக்கு புகழாராம் சூட்டியுள்ளார்.
421 மில்லியன் சந்தாதாரர்கள்
இன்று, எங்களின் 4ஜி நெட்வொர்க்கில் 421 மில்லியன் மொபைல் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் உள்ளனர் என்றும், அவர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துகிறார்கள் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
47% வருமானம் அதிகரிப்பு
ரிலையன்ஸின் வருடாந்திர ஒருங்கிணைந்த EBITDA 1.25 லட்சம் கோடி ரூபாய் என்ற முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது என கூறிய முகேஷ் அம்பானி ரிலையன்ஸின் ஒருங்கிணைந்த வருவாய் 47% அதிகரித்து $104.6 பில்லியனாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஏற்றுமதி
ஆண்டு வருவாயில் 100 பில்லியன் டாலர்களைத் தாண்டிய இந்தியாவின் முதல் கார்ப்பரேட் நிறுவனமாக எங்கள் நிறுவனம் திகழ்கிறது என்று பெருமையுடன் கூறிய முகேஷ் அம்பானி, FY22 இல் இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் RIL 8.4% பங்களித்தது என்றும் தெரிவித்தார்.
தீபாவளிக்குள் 5ஜி
தீபாவளிக்குள், பல முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜியை அறிமுகப்படுத்துவோம் என்றும், வரும் டிசம்பர் 2023க்குள், இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திற்கும் 5G வழங்குவோம் என்றும் முகேஷ் அம்பானி உறுதியளித்தார்.
ஆகாஷ் அம்பானி
ஜியோ 5ஜி உலகின் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட 5ஜி நெட்வொர்க்காக இருக்கும் என்று கூறிய ஆகாஷ் அம்பானி, ஜியோ 5G ஆனது கம்பிகள் இல்லாமல் காற்றில் அதி-உயர் ஃபைபர் போன்ற வேகத்தை வழங்குகிறது என்றும், நாங்கள் அதை ஜியோ ஏர் ஃபைபர் என்று அழைக்கிறோம் என்றும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். மேலும் ஜியோ ஏர்ஃபைபர் மூலம், உங்கள் வீடு அல்லது அலுவலகத்தை ஜிகாபிட் வேக இணையத்துடன் விரைவாக இணைப்பது மிகவும் எளிதாக இருக்கும் என்றும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.