இந்திய டெலிகாம் சந்தையில் சக போட்டி நிறுவனங்களாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் கடந்த வாரம் இந்தியாவின் 3 முக்கிய டெலிகாம் வட்டங்களில் இருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு முக்கியமான ஒப்பந்தம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்காகவும், வர்த்தகத்திற்காகவும் பல வருடங்களாகப் போட்டிப்போட்டு வரும் ஜியோ மற்றும் ஏர்டெல், சற்றும் எதிர்பார்க்காத வகையில் செய்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து ஒரு முக்கிய ஆய்வு வெளியாகியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
ஆந்திர பிரதேசம், டெல்லி, மும்பை ஆகிய 3 முக்கிய டெலிகாம் பகுதிகளில் ஏர்டெல்-க்குச் சொந்தமாக இருக்கும் 800 Mhz அலைக்கற்றையைக் கைப்பற்ற முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ சுமார் 1,497 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. டெலிகாம் துறையில் எதிரும் புதிருமாக இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் செய்துள்ள இந்த ஒப்பந்தம் முதல் முறையாக இப்படியொரு வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.
ஜியோ - ஏர்டெல் ஒப்பந்தம்
ஜியோ - ஏர்டெல் மத்தியில் தற்போது செய்யப்பட்டு உள்ள ஒப்பந்தம் இருதரப்புக்கும் லாபமானது எனச் சந்தை வல்லுனர்கள் கூறும் நிலையில், UBS ஒருமுக்கியமான ஆய்வை வெளியிட்டு இந்த ஒப்பந்தம் மூலம் முகேஷ் அம்பானிக்கு கிடைக்கும் மாபெரும் லாபத்தைக் குறித்துத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம், டெல்லி, மும்பை
இந்த ஒப்பந்தம் மூலம் ஆந்திர பிரதேசத்தில் 3.75 MHz, டெல்லியில் 1.25 MHz மற்றும் மும்பையில் 2.50 MHz என மொத்த 7.50 MHz அலைக்கற்றை 800MHz பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ கைப்பற்றியுள்ளது.
ஜியோவின் சேவை தரம்
இந்தக் கைப்பற்றல் மூலம் ரிலையன்ஸ் ஜியோ முழுமையான மற்றும் வலிமையான சேவை அளிக்கும் வகையில் 10MHz, 10MHz மற்றும் 15MHz அளவிலான டெலிகாம் பிளாக்குகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் ஜியோவின் டெலிகாம் சேவையின் தரம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வாடிக்கையாளர்களையும் பெற முடியும்.
பார்தி ஏர்டெல்-க்கும் லாபம்
பார்தி ஏர்டெல் இந்த 3 பகுதியில் விற்பனை செய்த அலைக்கற்றையை டாடா நிறுவனத்திடம் இருந்து வர்த்தகத்தைக் கைப்பற்றும் போது பெற்றது. ஆனால் இந்த அலைக்கற்றையைப் பெரிய அளவில் பயன்படுத்த முடியாமல் தேவையற்றதாக இருந்த நிலையில் இதை விற்பனை செய்து வருமானத்தைப் பார்த்துள்ளது பார்தி ஏர்டெல்.
400 மில்லியன் டாலர் லாபம்
20 வருட ஸ்பெக்ட்ரம் ஒப்பந்தம் கொண்ட இந்த 3 பகுதி அலைக்கற்றையில் தற்போது மீதம் 14 ஆண்டுகள் உள்ளது. ஸ்பெக்ட்ரம் விலையில் சுமார் 50 சதவீதம் தள்ளுபடியில் ஜியோ இதைக் கைப்பற்றியுள்ள நிலையில் வருடத்திற்கு ஒரு மெகா ஹெட்ஸ்-க்கு 14 கோடி ரூபாய்ச் சேமிக்கப்பட்டது மூலம் ரிலையன்ஸ் ஜியோ மொத்தமாகச் சுமார் 400 மில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சேமிக்கிறது.