இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாகப் பல வர்த்தகத்தில் இறங்குகிறது. பியூச்சர் குரூப் நிறுவனத்தின் வர்த்தகத்தைக் கைப்பற்றுவதில் துவங்கிய போட்டி ஜியோ மார்ட் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு உச்சத்தை அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அமேசான் சக ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்களுடன் போட்டிப்போட்டு தனக்கான இடத்தை இந்தியச் சந்தையில் கைப்பற்றி ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஜியோவின் அதிரடி ரீடைல் விரிவாக்கம் அமேசான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க நிறுவனமான அமேசான் தற்போது முகேஷ் அம்பானி-யின் ஜியோ நிறுவனத்தைப் போலவே புதிதாக ஆன்லைன் மருந்து விற்பனை சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ - Netmeds
ஆன்லைன் பார்மா துறையில் வர்த்தகத்தைத் துவங்கத் திட்டமிட்ட முகேஷ் அம்பானி புதியதாக ஒரு நிறுவனத்தை உருவாக்காமல் சந்தையில் ஏற்கனவே இத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனத்தை வாங்க முடிவு செய்து சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Netmeds நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றி ஆன்லைன் மருந்து விற்பனையில் துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஜியோ.
இதற்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இந்தப் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ரிலையன்ஸ் வெளியிடவில்லை.
அமேசான்
ஜியோவின் பேச்சுவார்த்தை ஆன்லைன் பார்மா சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து வரும் நிலையில் இரு முன்னணி நிறுவனங்கள் வர்த்தக இணைப்பிற்காகப் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே மிகப்பெரிய ரீடைல் வர்த்தகச் சந்தையை வைத்துள்ள அமேசான் ஆன்லைன் பார்மஸி வர்த்தகத்தை முதற்கட்டமாக டெக் நகரமாக விளங்கும் பெங்களூரில் துவங்கப்பட உள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது.
இப்புதிய சேவையின் பெயர் Amazon Pharmacy.
அமேசான் பார்மஸி
இப்புதிய சேவையின் கீழ் அமேசான் சாதாரண மருந்துகளும், மருந்து சீட்டு உடன் விநியோகிக்கப்படும் மருந்துகளும், அடிப்படை மருத்து உபகரணங்களும், ஆயுர்வேத மருந்துகளும் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் இப்புதிய சேவை எப்போது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரப்போகிறது என்பது பற்றி அமேசான் அறிவிக்கவில்லை.
ஆன்லைன் பார்மா துறை
இந்திய அரசு ஆன்லைன் மருந்து விற்பனை துறைக்கான கொள்கை வடிவமைப்பை இன்னும் இறுதி செய்யாத நிலையில், Medlife, Netmeds, PharmEasy மற்றும் 1mg எனப் பல பார்மா நிறுவனங்கள் அதிரடியான வர்த்தக வளர்ச்சியும், முதலீட்டையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் ரிலையன்ஸ் மற்றும் அமேசான் போன்ற பெரு நிறுவனங்களின் வருகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான போட்டி
இந்தியாவில் தற்போது ரீடைல் சந்தை வர்த்தகத்தில் மிகப்பெரிய போட்டி நிலவுகிறது. ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் ஜியோ மார்ட் அறிமுகத்திற்குப் பின் பிளிப்கார்ட் பெரிய அளவிலான வர்த்தக விரிவாக்கத்தைச் செய்துள்ளது. இதோடு மட்டும் அல்லாமல் ஆன்லைன் சேவையில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஆஸ்தான வர்த்தகத்தில் இருந்து மாறுபட்டுப் பல புதிய வர்த்தகப் பிரிவில் சேவைகளைத் துவங்கி வருகின்றனர்.
இதனால் அடுத்த 5 வருடத்தில் இந்தியாவின் ஆன்லைன் வர்த்த்கம் மற்றும் ஆன்லைன் பேமெண்ட் இரட்டிப்பு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 கிடங்குகள்
இந்தியாவில் தற்போது நிலவும் வர்த்தகப் போட்டியை சமாளிக்கவும், வர்த்தக விரிவாக்கம் செய்யவும் இந்தியா முழுவதும் புதிதாக 10 கிடங்குகளை அமேசான் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மதுபானம்
இதோடு அமேசான் ஆன்லைன் ஆர்டர் பெயரில் மதுபானங்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஒரு மாநிலத்தில் மட்டும் அனுமதியைப் பெற்றுள்ளது. இது இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்யும்போது அமேசான் மதுபான விற்பனையை இந்தியா முழுக்க விற்பனை செய்ய முடியும்.