இந்திய டெலிகாம் சேவை சந்தையில் 2ஜி பிரிவில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இருக்கும் வேளையிலும், இன்று டேட்டா மற்றும் இண்டர்நெட் தான் பெரிய வர்த்தகமாக மாறியுள்ள வேளையிலும் இப்பிரிவு வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்குக் கீழ் இழுக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.
இந்தப் போனுக்குக் கிராமம் மற்றும் சிறிய டவுன் பகுதிகளில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில் அதிகளவிலான மக்கள் ஜியோபோன் நெக்ஸ்ட்-க்காகக் காத்திருக்கின்றனர்.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூகுள் - குவால்கம் ஆகிய இரு நிறுவனங்கள் உடன் சேர்ந்து நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத்தும் வகையில் மிகவும் குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட போன் தான் ஜியோபோன் நெக்ஸ்ட்.
ஜியோபோன் நெக்ஸ்ட்
இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் விநாயகர் சதுர்த்திப் பண்டிகையின் போதே அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்திருந்த நிலையில் போதுமான சிப் இல்லாத காரணத்தால் இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் அளவிற்குப் போதுமான இருப்பு இல்லை. இதனால் அறிமுக நாள்-ஐ ஒத்திவைத்தது.
நவம்பர் 4
இந்நிலையில் தற்போது வருகிற நவம்பர் 4ஆம் தேதி அதாவது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது ஜியோபோன் நெக்ஸ்ட்-ஐ விற்பனை சந்தைக்கு அறிமுகம் செய்ய முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
4ஜி ஸ்மார்ட்போன்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் சேவை பிரிவான ரிலையன்ஸ் ஜியோ-வில் கூகுள் முதலீடு செய்தது அனைவருக்கும் தெரியும். இந்த முதலீட்டிற்கு பின்பு மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்காகக் கூகுள் இந்தியர்களுக்காகவே தனது ஆண்ட்ராய்டு செயலியில் மாற்றங்களைச் செய்து அளித்துள்ளது.
குவால்கம்
தற்போது அறிமுகம் செய்யப்படும் ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியர்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பிரகதி ஓஎஸ் இயங்க உள்ளது. மேலும் இந்தப் போன் குவால்கம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 215 சிப் மூலம் இயங்க உள்ளது.
டிஜிட்டல் டெக்னாலஜி
அனைத்திற்கும் மேலாக இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியாவுக்காக, இந்தியர்களால், இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிலவு விலை ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் மூலம் அனைத்து இந்தியர்களும் டிஜிட்டல் டெக்னாலஜியை பயன்படுத்த சரிசமமான வாய்ப்புகளை அளிக்க முடியும் என ரிலையன்ஸ் நம்புகிறது.
வெறும் 3,499 ரூபாய்
மேலும் இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் வெறும் 3,499 ரூபாய் விலையில் கிடைக்கும் காரணத்தால் பியூச்சர் போன் பயன்படுத்தும் அனைவரும் இதை வாங்க வாய்ப்பு உள்ளது. இதோடு இந்த ஒரு போன் அறிமுகத்தின் மூலம் ஜியோ அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஆதிக்கம்
இதனால் ஜியோ அடுத்தச் சில ஆண்டுகளுக்குத் தனது கட்டணத்தை உயர்த்தாமல் அப்படியே வைத்திருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உண்டு. இது ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவுக்குக் கூடுதல் சுமையாகவும், வர்த்தகப் பாதிப்பாகவும் அமையும்.