2020-21ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் குறித்துத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2020ஆம் ஆண்டுக் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்புக் காரணமாக இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் மாயமானது.
இந்நிலையில் தற்போது வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், வேலைவாய்ப்பு சந்தையும் சரிவில் இருந்து மீண்டு வருகிறது.
வேலைவாய்ப்புச் சந்தையில் புதிய மாற்றம்
ஆனால் எப்போதும் இல்லாத வகையில் தற்போது, நிலையான சம்பளம் அளிக்கும் நிரந்தர வேலைவாய்ப்புகளை விடவும் ஊழியர் - நிறுவனம் என்ற கட்டமைப்பு இல்லாமல் கான்டிராக்ட் மற்றும் பிளாட்பார்ம் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகி வருகிறது.
மேலும் சந்தையில் வேலை இழந்தோர் எண்ணிக்கை எப்போதும் இல்லாமல் அதிகமாக இருக்கும் நிலையில், மக்களுக்கும் இத்தகைய வேலைவாய்ப்புகளுக்கு எவ்விதமான மறுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.
தனிநபர் நிதியியல் திட்டமிடல்
இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் தனிநபர் நிதியியல் திட்டமிடல், முதலீடு மற்றும் சேமிப்பில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும் எனத் தெரிகிறது.
இதுமட்டும் அல்லாமல் ஓய்வூதியம், குழந்தைகளுக்கான கல்வி, மருத்துச் செலவுகளுக்கான நிதி சேமிப்பு, முதலீடு, இன்சூரன்ஸ் என அனைத்தும் பல்வேறு மாற்றங்களைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய வேலைவாய்ப்பு முறை
இந்தியாவில் தொழில்நுட்பம், புதிய பொருளாதாரம், புதிய வர்த்தக முறை ஆகியவற்றின் உதவிகள் மூலம் டிஜிட்டல் நிறுவனங்கள் மிகவும் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கச் சக்தியைப் பெற்றுள்ளது. இதேபோல் நுகர்வோர் மற்றும் சேவைத் துறையில் பல புதிய வர்த்தகங்கள் அறிமுகமாகியுள்ள நிலையில் இந்தியாவில் flexi-staffing பெரிய அளவில் 2020ல் வளர்ச்சி அடைந்துள்ளது.
GIG எகானமி வேலைவாய்ப்புகள்
குறிப்பாக டிஜிட்டல் சேவை தளத்தில் தற்போது உருவாகியுள்ள அதிகப்படியான வேலைவாய்ப்புகளை GIG எகானமி வேலைவாய்ப்புகள் எனக் கூறப்படுகிறது. இத்தகைய வேலைவாய்ப்புகள் நிரந்தர வேலைவாய்ப்பாகவும் இல்லாமல், ஒப்பந்த வேலைவாய்ப்பாகவும் இல்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் வேலை இருக்கும், இல்லாமலும் இருக்கும் என்பது போன்ற நிலையற்ற தன்மையில் உள்ளது என்பதைத் தான் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.