அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ தோற்கடித்து வெற்றி கண்டதைக் காட்டிலும் துணை அதிபராகக் கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டதைத் தான் இந்தியர்கள் கொண்டாடினர். காரணம் அவர் இந்தியர் என்பது மட்டுமே.
இதேபோல் ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்றிய சில நாட்களில் பல முக்கியப் பொறுப்புகளில் அமெரிக்க இந்தியர்களை நியமித்தார். இதன் தொடர்ச்சியாகப் பல இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை நியமிக்கப்பட்டதைப் பார்த்தோம்.
இந்நிலையில் ஜோ பைடன் நிர்வாகக் குழுவில் எத்தனை இந்தியர்கள் தற்போது உள்ளனர் தெரியுமா..?
ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் 130க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்களை முக்கியப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவீதமாக மட்டுமே இருக்கும் இந்திய சமூகத்தில் இருந்து 130 பேர் என்றால் வியக்கவைக்கும் எண்ணிக்கை தான்.
இந்திய அமெரிக்கர்கள்
இதன் மூலம் அவர் 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடன் அறிவிக்கப்பட்ட போது அமெரிக்க இந்திய சமுகத்திற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், வரலாற்றுச் சாதனையும் படைத்துள்ளார் ஜோ பைடன்.
டொனால்ட் டிரம்ப், பராக் ஒபாமா
ஜோ பைடன்-க்கு முன்பு ஆட்சியில் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் 80 க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்களைத் தனது நிர்வாகத்தில் நியமித்தார். இதேபோல் பராக் ஒபாமாவின் எட்டு ஆண்டுகாலப் பதவி காலத்தில் 60க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்களை முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளார். தற்போது ஜோ பைடன் அனைவரையும் முந்தி அதிகப்படியான இந்திய-அமெரிக்கர்களை நியமித்த புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நான்கு பேர் உட்படப் பல்வேறு மாநில மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் முன்னணி அமெரிக்க நிறுவனங்களில் தலைமை வகிக்கின்றனர்.
ரொனால்ட் ரீகன்
ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் தான் முதன் முதலில் இந்திய-அமெரிக்கர்களை அரசு நிர்வாக மட்டத்தில் நியமனம் செய்யப்பட்டது. தற்போது ஜோ பைடன் ஆட்சி காலத்தில் தனது நிர்வாகத்தின் கீழ் இருக்கும் அனைத்துத் துறைகள் மற்றும் அமைப்புகளில் இந்திய-அமெரிக்கர்களை நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கமலா ஹாரிஸ்
ஜோ பைடன் செனட்டர் ஆக இருந்த நாட்களில் இருந்தே இந்திய-அமெரிக்கர்கள் உடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார். அதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் இந்திய-அமெரிக்கர்கள் பெரிய அளவில் உதவியுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை துணை அதிபராகத் தேர்ந்தெடுத்து வரலாற்றைப் படைத்தார்.