டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த போது சீனா, சீன நிறுவனங்கள், சீனா பொருட்கள் எனச் சுத்தி சுத்தி பல்வேறு தடைகள், வரி விதிப்புகள் என அதிரடியாக விதித்தார்.
இதனால் அமெரிக்கா - சீனா இடையே கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் அதிகமாக வர்த்தகப் போர் இருந்தது. இரு நாடுகளும் மாறி மாறி அதிகப்படியான வரி விதிப்பை விதித்தது.
ஆனால் ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்றிய பின்பு அமெரிக்கா - சீனா இடையே இருந்த வர்த்தகப் போர் பதற்றம் குறைந்தாலும், வரி விதிப்புகள், வர்த்தகத் தடைகள் அப்படியே தான் இருந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் இன்று சீனா மீது விதிக்கப்பட்ட வரி விதிப்புகளைக் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சீனப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட சில வர்த்தக வரிகளை நீக்குவது குறித்துப் பரிசீலிப்பதாகக் கூறினார். இதேபோல் எரிபொருள் விலையைக் குறைக்க உலகத் தலைவர் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க OPEC நாடுகளை வலியுறுத்த வேண்டுகோள் விடுத்தார்.
ஜோ பைடன்
அமெரிக்கா பொருளாதாரம் பணவீக்க பாதிப்பால் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் வேளையில் ஜோ பைடன், பிற நாடுகளின் உதவிகள் தேவைப்படும் காரணத்தால் சீனா மீதான வரி விதிப்பைக் குறைத்து வர்த்தகத் தடைகளைக் குறைக்கும் முயற்சிகளை எடுக்க முடிவு செய்துள்ளார்.
ஜப்பான்
ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஒரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜோ பைடன், அமெரிக்கப் பொருளாதாரத்தில் "சிக்கல்கள்" இருப்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அவை "உலகின் பிற நாடுகளைக் காட்டிலும் குறைவான அளவிலேயே உள்ளது" என்று தெரிவித்தார்.
அமெரிக்கப் பொருளாதாரம்
அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டு உள்ள இந்த வர்த்தகத் தடைகள் அனைத்தும் சரிசெய்யப்படச் சில காலம் தேவைப்படும், ஆனால் மந்தநிலைக்குத் தள்ளப்படும் அபாயம் எதுவும் இல்லை என்றும் செய்தியாளர்கள் மத்தியில் ஜோ பைடன் தெரிவித்தார்.
இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு
மேலும் இன்று டோக்கியோவில் இந்தியா, அமெரிக்கா அதிபர்கள் இணைந்து 12 நாடுகள் கொண்ட இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (ஐபிஇஎஃப்) பொருளாதாரச் செழுமைக்காக வெளியிடப்பட்டது. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க வலுவான பொருளாதாரக் கொள்கையை வகுக்க இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.