உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யா - அமெரிக்கா மத்தியில் கடுமையான வர்த்தகப் பாதிப்புகளும், தடைகளும் விதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா கிட்டத்தட்ட ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா தற்போது புதின் வாரிசுகள் மீதும், ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகள் மீதும் புதிதாகத் தடை விதித்துள்ளது.
உக்ரைன் மக்கள் உயிரிழப்பு
உக்ரைன் மீதான போரின் மூலம் ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டு மக்களைக் கொடூரமாகக் கொன்றதை கண்டித்துத் தற்போது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் புதிதாகத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவுக்குக் கூடுதலான நெருக்கடி உருவாகியுள்ளது. இதேபோல் புதினின் பிள்ளைகள் மீதும் கடுமையான தடைகள் விதிக்கப்பட உள்ளது.
ரஷ்ய வங்கிகள்
அமெரிக்கா அரசின் 7 பேர் கொண்ட குழுவும், ஐரோப்பிய யூனியனும் இணைந்து ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான SBERBANK மற்றும் மிகப்பெரிய தனியார் வங்கியான ALFA BANK மீதும் முழுத் தடையை விதிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் இவ்விரு வங்கிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உடன் எவ்விதமான தொடர்பையும் பெற முடியாத அளவிற்குத் தற்போது தடை விதிக்கப்பட உள்ளது.
SBERBANK ஆதிக்கம்
இதில் SBERBANK ரஷ்யாவின் ஒட்டுமொத்த நிதியியல் சொத்துக்களில் 3ல் ஒரு பங்கை வைத்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவின் ஒட்டுமொத்த நிதியியல் தளத்தில் பெரிய அளவிலான ஆதிக்கம் செய்து வருகிறது. அமெரிக்கா விதித்துள்ள இப்புதிய தடை மூலம் SBERBANK உடன் அமெரிக்க நிதியியல் சேவை தளம் மத்தியிலான உறவு முற்றிலும் தடை செய்யப்பட உள்ளது
விளாடிமிர் புதின் மகள்கள்
இதேவேளையில் அமெரிக்கா ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மகளான கேட்ரினா டிகோனோவா மற்றும் மரியா புடினா, இவர் மரியா வொரொன்ட்சோவா என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. இவ்விருவரும் அமெரிக்காவில் முதலீடு, வர்த்தகம், பயணம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் அமெரிக்காவில் இருக்கும் சொத்துக்களைப் பயன்படுத்த முடியாத வகையில் உத்தரவு வெளியாகியுள்ளது.
பிற முக்கிய அதிகாரிகள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மகள்கள் உடன் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மனைவி மற்றும் மகள் மற்றும் முன்னாள் பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் உட்பட ரஷ்யாவின் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரின் மீதும் இப்புதிய தடை உத்தரவு வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்கத் தடை விதிக்கப்பட்டவர்களின் சொத்துக்களைக் கைப்பற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளது.