அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள ஜோ பிடன் அடுத்த சில வாரத்தில் அதிபராகப் பொறுப்பு ஏற்க உள்ள நிலையில், பிடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ்-ம் நிர்வாகக் குழு, அமைச்சரவை, முக்கியத் தலைவர்களின் தேர்வுகளில் எனப் படு பிசியாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பொருளாதாரக் குழுவிற்குப் புதிய உறுப்பினராக இந்திய அமெரிக்கரான பரத் ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்தத் தேசிய பொருளாதாரக் குழு தான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கு இடையிலான பொருளாதாரக் கொள்கையை வடிவமைப்பு செய்யும் பணியை மேற்கொள்கிறது.
இதற்கிடையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து போடப்படும் நிலையில் ஜோ பிடன் மக்களோடு மக்களாகப் பொது இடத்திலேயே தடுப்பு மருந்தை போட்டுக்கொண்டார்.
பரத் ராமமூர்த்தி
திங்கட்கிழமை வெளியான அறிவிப்பில் அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பிடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் தேசிய பொருளாதாரக் குழுவிற்கு 3 புதிய உறுப்பினர்களை அறிவித்துள்ளனர். இந்த 3 பேரும் தேசிய பொருளாதாரக் குழுவில் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் ஜோ பிடன் நிர்வாகக் குழு தெரிவித்தது. இதில் இந்திய அமெரிக்கரான பரத் ராமமூர்த்தி-யும் ஒருவர்.
3 புதிய உறுப்பினர்கள்
இதன் படி ஜோலே காம்பெல், பொருளாதார கொள்கையை அதிபரின் சிறப்பு உதவியாளர், டேவிட் கமின் தேசிய பொருளாதாரக் குழுவின் துணைத் தலைவர், பரத் ராமமூர்த்தி தேசிய பொருளாதாரக் குழுவின் நிதியியல் சீரமைப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அமெரிக்காவில் பிறந்தவர்
பரத் ராமமூர்த்தி அமெரிக்காவின் Massachusetts மாகாணத்தில் பிறந்து ஹார்வார்டு பல்கலைக்கழகம் மற்றும் யேல் சட்ட பள்ளிகளில் பட்டம் பெற்றவர். இவர் 2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது எலிசபெத் வாரன்-க்குத் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தவர்.
500 பில்லியன் டாலர் ஊக்க திட்டம்
இதற்கு முன் ராஸ்வெல்ட் இன்ஸ்டியூட்-ன் கார்பரேட் பவர் திட்டத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏப்ரல் மாதம முதல் அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான கேர்ஸ் திட்டத்தை வடிவமைப்பு, நிர்வாகம் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியர்கள் எண்ணிக்கை அதிகம்
அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் அரசு நிர்வாகத்தில் எப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான இந்தியர்கள் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆட்சியில் இடம்பெற்றுள்ளனர். இதனால் அமெரிக்கா - இந்தியா இடையிலான நடப்புறவும் ஜோ பிடன் ஆட்சி காலத்தில் புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.