அமெரிக்க அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக இருப்பது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் தான். இரு நிறுவனம் எப்படி அரசியல் விளம்பரங்களைக் கையாளப்போகிறது, மக்களிடம் எப்படி நம்பிக்கையைச் சேர்ப்பது என இரு துருவத்தில் இரு நிறுவனங்களும் பணியாற்றி வரும் நிலையில் பல முன்னணி தலைவர், பிரபலங்களின் டிவிட்டர் கணக்கை ஒரு பிட்காயின் மோசடி கும்பல் ஹேக் செய்துள்ளது.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பல அரசியல் தலைவர்கள் அரசியல் பிரச்சாரத்திற்காகப் பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த நிலையில் சமுக வலைத்தளத்தில் பிரபலங்களின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
முக்கியத் தலைவர்கள்
அமேசான்.காம் தலைவர் ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா, அமெரிக்க அதிபர் தேர்தல் 2020ல் டிரம்ப்-க்கு எதிராகப் போட்டிப் போடும் ஜோய் பிட்டென், மைக் ப்ளூம்பெர்க், கெயின் வெஸ்ட், வாரன் பபெட், எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனம், கிம் கார்தாஷியன், உபர் நிறுவன போன்ற பல முன்னணி பிரபலங்கள் கணக்கை ஒரு கும்பல் ஹேக் செய்து ஒரு பதிவைச் செய்துள்ளது.
டிவிட்டர் போஸ்ட்
பில் கேட்ஸ், ஜெப் பிசோஸ், எலான் மஸ்க் ஆகியோரின் கணக்குகளில் குறிப்பிட்டுள்ள மைய கருத்து இதுதான், " அடுத்த 30 நிமிடத்தில் எல்லோரும் தங்களுடைய பிட்காயின்-ஐ இந்தப் பிட்காயின் முகவரிக்கு அனுப்புங்கள், அனுப்பப்படும் அனைவருக்கும் 2 மடங்கு பிட்காயின் திருப்பிக் கொடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டு இருந்தது.
ஆனால் இது ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமாகச் செய்தியைக் குறிப்பிடப்பட்டது, உதாரணமாகப் பில்கேட்ஸ்-க்கு சமுகத்திற்கு உதவிட வேண்டும் என்றும், எலான் மஸ்க்-க்கு கொரோனா-வால் மனம் உவந்து செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஜோய் பிட்டென்
அதிபர் தேர்தலில் தற்போதைய அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப் உடன் போட்டிப்போடும் ஜோய் பிட்டென், இந்தப் பிட்காயின் மோசடியின் கும்பலின் செயலுக்குப் பின் அடுத்த சில நிமிடங்களில் அப்பதிவை நீக்கிவிட்டு டிவிட்டர் கணக்கை மூடிவிட்டார்.
ஜாக் டோர்சி
அதுகுறித்து டிவிட்டர் தலைவர் ஜாக் டோர்சி தனது டிவிட்டர் கணக்கில், இந்த நிகழ்வுக்கு மிகவும் வருந்துகிறோம் என்றும், இந்தப் பிரச்சனை குறித்துத் தகவல்களை முழுமையான புரிதலுக்குப் பின் வெளியிடுகிறோம். எங்களது அணி இந்தப் பிரச்சனையைக் களையக் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.