உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் எரிபொருள் விலையின் தாக்கத்தின் காரணமாக மே மாத பணவீக்கம் 40 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கத் தொழிலதிபர்களுக்கும், உலக நாடுகளுக்கும் முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அறிவிப்பு இந்தியாவை நேரடியாகப் பாதிக்காவிட்டாலும், மறைமுகமாக கட்டாயம் பாதிக்கும்.
தொழிலாளர் துறை
அமெரிக்க அரசின் தொழிலாளர் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நுகர்வோர் விலைக் குறியீடு அதாவது சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 8.6% அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. டிசம்பர் 1981 க்குப் பின் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது அந்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோ பைடன்
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவில் பணவீக்கம் அடுத்த சில காலம் நீட்டிக்கும் எனவும், நாட்டில் விலைவாசி சமீபகாலமாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதைப் பெவர்லி ஹில் பகுதியில் நடந்த முதலீட்டை திரட்டும் நிகழ்ச்சியில் ஜோ பைடன் தெரிவித்தார்.
தற்காலிகம்
தொழில்முறை பொருளாதார வல்லுநர்களும் ஆரம்பத்தில் பணவீக்க அழுத்தங்கள் தற்காலிகமாகத் தான் இருக்கும் என்று நினைத்தனர், ஆனால் கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
எரிபொருள் விலை
மே மாதத்தின் பணவீக்க அதிகரிப்புக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது எரிபொருள் விலையில் ஏற்பட்ட அதிகப்படியான உயர்வு தான். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மே 2022ல் எரிபொருள் விலை சுமார் 34.6% உயர்ந்துள்ளது. இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 120.7 டாலர், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 122.0 டாலர்.
பெடரல் ரிசர்வ் வங்கி
அமெரிக்கா பணவீக்க பாதிப்புகளைக் குறைக்க அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்துவது 95 சதவீதம் உறுதியாகியுள்ளது. இந்த வட்டி உயர்வு மூலம் இந்திய சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேற வாய்ப்புகள் உள்ளது.