ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் வாரியம், ஜிண்டால் பவர் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள தனது முழு பங்கினை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
ஜிண்டால் பவர் லிமிடெட் நிறுவனத்தின் முழு பங்கினையும், அதாவது 96.42% பங்கினை 3,015 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய, வேர்ல்டோன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளதாக ஜே.எஸ்.பி.எல்., பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிராண்ட் தோர்டன் அட்வைசரி நடத்திய ஏல முறையில், வேர்ல்டோன் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் வேர்ல்டோன் நிறுவனம் ஜிண்டாலில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஜே.எஸ்.பி.எல்., வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிண்டால் பவரின் பங்குகளை விற்க, வோர்ல்டோனின் ஒப்பந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளது. மேலும் இந்த பங்கு விற்பனையானது ஜே.எஸ்.பி.எல்., பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்குனர்களிடமிருந்து ஒப்புதல், மற்ற சட்ட ரீதியிலான ஒப்புதல்கள், பிற அனுமதிகள் என அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த பங்கு விற்பனை குறித்து ஜே.எஸ்.பி.எல்., கூறுகையில், கடனை குறைத்து, அதன் இந்திய ஸ்டீல் வணிகத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் ஜிண்டால் பவரின் முழு பங்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று என் எஸ் இயில், 1.57% அதிகரித்து 449.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே பி எஸ் இ-யில் 1.82% அதிகரித்து 450.35 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.