ஊழலுக்கு பேர் போன விஜய் மல்லையா, நிரவ் மோடிக்கு அடுத்த படியாக சஞ்சய் சஞ்சய் சிங்கால் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் பூஷன் ஸ்டீல் நிறுவனம் ஏழு வருட காலத்தில் 33 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி விட்டு கட்டாமல் மோசடி செய்தது கண்டறியப்பட்டது.
கடந்த 2007 முதல் 2014 வரையிலான காலத்தில் பூஷன் ஸ்டீல் நிறுவனம், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், இதற்கு முக்கியமாக, அந்த நிறுவனத்தின் அப்போதைய தலைவர் சஞ்சய் சிங்கால் என்றும் கூறப்பட்டது.
மேலும் பூஷன் நிறுவனம் பல சொத்துகளை சட்டத்தை மீறி வாங்கியிருப்பதாகவும், பிபிஎஸ்எல் நிறுவனத்தில் பங்கு முதலீடு, டெல்லி மற்றும் லண்டனில் அசையும் அசையா சொத்துகளை வாங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடன் மோசடி
பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் அலகாபாத் வங்கியிலிருந்து மட்டும் அல்ல, கடந்த 2007 முதல் 2014 வரையிலான காலத்தில் மட்டும், இந்த நிறுவனம் சுமார் 47,204 கோடி ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் வங்கியில் பெற்ற கடனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது.
ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல் கையகப்படுத்தலா?
இதற்கிடையில் ஒன்றரை வருட காலத்திற்கு பிறகு, திவலான பூஷன் பவர் & ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தினை, மார்ச் 25க்குள் ஜே எஸ் டபள்யூ ஸ்டீல் கையகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பூஷன் நிறுவனத்தின் கடன்தாரர்களுக்கு கடனை திரும்ப செலுத்த ஜே எஸ் டபள்யூ தயாராக இருப்பதாகவும் இந்த மாத இறுதிக்குள் இந்த கையகப்படுத்தல் முடியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு நிலுவையில் உள்ளது
எனினும் பூஷன் நிறுவனத்தின் முன்னணி புரோமோட்டர்களுக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு இது குறித்து இந்த நிறுவன வட்டாரங்களில் இந்த இரு நிறுவனங்களும் பேச்சு வார்த்தையில் உள்ளதாகவும், எனினும் உறுதிபட எதுவும் கூற இயலாது எனவும் கூறியுள்ளன. உண்மையில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
விடிவு காலம் எப்போது?
பூஷன் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த நிறுவனங்களில் எஸ்பிஐ அதிகளவிலும், இதனையடுத்து பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா வங்கி உள்ளிட்ட பலரிடமும் கடன் பெற்றுள்ளது. இந்த கையகப்படுத்தல் கூட இந்த நிறுவனத்திற்கு ஒரு விடிவுகாலமாக கூட இருக்கலாம்.