இந்தியாவில், ஜூன் 2020-ல் 13.68 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்து இருக்கிறார்களாம். கடந்த பிப்ரவரி 2015-க்குப் பிறகான காலத்தில் இந்த அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி சந்தித்ததே இல்லையாம்.
கடந்த ஜூன் 2019-ல் இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யை விட, இந்த ஜூன் 2020-ல் 19 சதவிகிதம் குறைவாகவே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து இருக்கிறார்களாம். கடந்த மூன்று மாத காலமாக, இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்ந்து சரிந்து கொண்டே இருப்பதாகவும் பெட்ரோலியத் துறை அமைச்சகமே சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கான தேவை இன்னும் முழுமையாக பழைய நிலைக்கு வரவில்லை. இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கான தேவை பழைய நிலைக்கு வர கொஞ்சம் அதிக காலம் ஆகலாம் எனவும் யூ பி எஸ் நிறுவனத்தின் அனலிஸ்ட் கியொவனி ஸ்டனுவோ (Giovanni Staunovo) சொல்லி இருக்கிறார்.
அதோடு, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து இருந்ததால், இன்னமும் இந்தியாவின் கைவசம் போதுமான கச்சா எண்ணெய் இருக்கிறது. எனவே தான் தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறைகிறது எனவும் சொல்லி இருக்கிறார்.
உலகத்தின் மூன்றாவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில், கடந்த ஜூன் 2019-ல் இருந்த கச்சா எண்ணெய் தேவையை விட, இந்த ஜுன் 2020 மாதத்தில், கச்சா எண்ணெய் தேவை 7.8 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று நாளுக்கு நாள் இந்தியாவின் அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீபத்தில், இந்தியாவில், ஒரே நாளில் 55,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்படி ஒரு பக்கம் கொரோனா, நம் வாழ்கையோடு கபடி விளையாடிக் கொண்டு இருக்கும் போது, பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை ஏற்றம் வேறு சேர்ந்து கொண்டு எரிபொருளின் டிமாண்டை குறைத்துக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவின் மிகப் பெரிய சுத்திகரிப்பு கம்பெனியான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், எரிபொருட்களுக்கான தேவை குறைவாக இருப்பதால், இந்த 2020 - 21 நிதி ஆண்டு முழுக்கவே, தங்கள் கெபாசிட்டிக்கும் குறைவாகவே தான் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது.