இந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், தனது வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், மேம்பாட்டிற்காகவும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்துள்ளது.
இதன் படி கல்யாண் ஜுவல்லர்ஸ் ஐபிஓ-வுக்கான விண்ணப்பத்தை ஆகஸ்ட் மாதம், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்த நிலையில், பலகட்ட ஆய்வுகள் மற்றும் சோதனைக்குப் பின்பு செபி கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் 1750 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ-விற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கு ஐபிஓ ஒப்புதல் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
1750 கோடி ரூபாய் ஐபிஓ
செபி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கல்யாண் ஜுவல்லர்ஸ் சுமார் 1750 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபிஓ திட்டத்தை வெளியிட உள்ளது. இதில் 1000 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை முதலீட்டாளர்களுக்கும். 750 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை OFS பிரிவில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
750 கோடி ரூபாய்
கல்யாண் ஜுவல்லர்ஸ் தற்போது ரீடைல் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளில், 500 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை இந்நிறுவனத்தின் பழைய முதலீட்டாளர் Highdell Investment Ltd விற்பனை செய்கிறது, மீதமுள்ள 250 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளைக் கல்யாண் ஜுவல்லர்ஸ் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் பெற உள்ளது.
முதலீடு
கல்யாண் ஜுவல்லர்ஸ் தற்போது ஐபிஓ மூலம் பெறப்படும் முதலீட்டை வர்த்தக விரிவாக்கத்திற்கும், கார்பரேட் பணிகளுக்கும் பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்தியாவில் மட்டும் சுமார் 107 ஷோரூம்களை 21 மாநிலங்கள் கொண்டு வர்த்தகம் செய்கிறது. மேலும் 30 மத்திய கிழக்கு நாடுகளில் 30 ஷோரூம்களைக் கொண்டு மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளது.
பங்கீடு
தற்போது கல்யாண் ஜுவல்லர்ஸ்-ன் ப்ரோமோட்டர்கள் 76 சதவீத பங்குகளையும், 24 சதவீத பங்குகளைத் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான வார்பர்க் பின்கஸ் நிறுவனம் வைத்துள்ளது.
2014ஆம் ஆண்டு வார்பர்க் பின்கஸ் நிறுவனம் 1200 கோடி ரூபாயும், 2017 கூடுதலாக 500 கோடி ரூபாய் முதலீடு செய்ததன் மூலம் 24 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
வருடாந்திர முடிவுகள்
மார்ச் 30, 2020 உடன் முடிந்த நிதியாண்டில் கல்யாண் ஜுவல்லர்ஸ் 10,101 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது, இக்காலக்கட்டத்தில் மொத்த லாபமாக 145 கோடி ரூபாய் பெற்றுள்ளது கல்யாண் ஜுவல்லர்ஸ்.
2019 நிதியாண்டை ஒப்பிடுகையில் 2020ஆம் நிதியாண்டில் வருவாய்-ல் 3.3 சதவீதமும், லாபத்தில் 487 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.